சங்கிலி பறிப்பின் போது திருடர்களிடம் போராடிய பேராசிரியை!!
கொடுங்கையூர் சேலவாயில் ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி லட்சுமி (38). பிராட்வேயில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணி புரிந்து வருகிறார்.
இன்று காலை தனது ஸ்கூட்டியில் கல்லூரிக்கு புறப்பட்டார். 8.30 மணியளவில் கண்ணதாசன்நகர் பஸ்நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், பேராசிரியை லட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றனர். உடனே அவர் கொள்ளையரிடம் இருந்து தப்பிக்க போராடினார்.
‘‘திருடன்… திருடன்’’ என்று கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்தவன் பேராசிரியை லட்சுமி கழுத்தில் கிடந்த சங்கிலியை வேகமாக பறித்தான். இதில் நிலை தடுமாறிய அவர் ஸ்கூட்டியுடன் கீழே விழுந்தார்.
அருகில் வந்தவர்கள் அவரை தூக்கினார்கள். அவரது அருகில் தங்க சங்கிலியும் அறுந்த நிலையில் கிடந்தது. அதை அவரிடம் ஒப்படைத்தனர். கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த பேராசிரியை லட்சுமி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கண்ணதாசன் நகர் பஸ் நிலையம் அருகே அடிக்கடி சங்கிலி பறிப்பு சம்பவம் நடைபெறுகிறது.
கொள்ளையரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதியில் உள்ள பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Average Rating