உணவின்றி எழுந்து நடக்க முடியாமல் உயிருக்கு போராடும் மூதாட்டி!!
நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்து எஸ்.வாழவந்தி கிராமத்தில் சிங்கார பாறை அமைந்துள்ளது. இங்குள்ள கலையரங்கத்தில் கடந்த பத்து நாட்களாக வயதான சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் உணவு எதுவும் சாப்பிடாமல் தண்ணீர் மட்டுமே குடித்து வருகிறார். உணவு எதுவும் சாப்பிடாததால், எழுந்து நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக உள்ளார். அவரிடம் சென்று விசாரித்தால் தனது ஊர் கரூர் மாவட்டம் சணப்பிரட்டை என கூறுகிறார். சிறு நேரம் கழித்து வேறு யாராவது கேட்டால், எனது ஊர் சின்னகாளிப்பட்டி எனவும், தனக்கு கணவன் மற்றும் குழந்தைகள் யாரும் கிடையாது என கூறுகிறார்.
இந்த வயதான மூதாட்டிக்கு அந்த கிராம மக்கள் சாப்பிட உணவு ஏதாவது கொடுத்தால், வாங்கி சாப்பிட மறுக்கிறார். தான் கொண்டு வந்த தண்ணீர் பாட்டிலில் மட்டும் குடிக்க தண்ணீர் கேட்டு அருகில் வாங்கி வைத்துக்கொண்டு, தனக்கு பசிக்கும் போது தண்ணீரை மட்டுமே குடித்து வருகிறார். இவர் மஞ்சள் நிறத்தில் பாவாடை அணிந்துள்ளார். வெளிர் மஞ்சள் நிறத்தில் சாக்கெட் அணிந்துள்ளார். பூப்போட்ட ஆரஞ்ச் கலர் சேலை அணிந்துள்ளார். தனது தலை முடியை அடிக்கடி தனது கைகளால் கோதி விட்டுக் கொள்கிறார். உணவு சாப்பிடாமல் தண்ணீர் மட்டுமே சாப்பிட்டு, எழுந்து நடக்க முடியாமல் படுத்தே இருக்கும், இந்த வயதான மூதாட்டியை இந்த பகுதி மக்கள் வந்து பார்த்து செல்வதை காணமுடிந்தது.
பார்ப்பதற்கு நல்ல குடும்பத்தை சேர்ந்தவர் போல காணப்படுகிறார். வயதானதால் வீட்டில் வைத்து பராமரிக்க முடியாமல் யாராவது காரில் அழைத்து வந்து இங்கு விட்டுவிட்டு சென்றுள்ளனரோ என அந்த ஊர்பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், வருவாய் துறையினரிடம் தகவல் கொடுத்தபோது, இவரை பராமரிப்பது எங்கள் வேலை இல்லை. இறந்தால் மட்டுமே காவல் துறைக்கு தகவல் தருவது மட்மே எங்களது வேலை என அவர்கள் பதில் கூறுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். கல் நெஞ்சம் படைத்தவர்கள் செய்யும் இது போன்ற காரியத்தால், இங்கே ஒரு உயிர் ஊசலாடிக்கொண்டு இருக்கிறது. முதியோர் இல்லம் வைத்து நடத்துபவர்கள் அல்லது மாவட்ட நிர்வாகம் இவரை அழைத்து சென்று முதியோர் இல்லத்தில் வைத்து பராமரித்தால் ஒரு உயிர் காப்பாற்றப்படலாம்.
Average Rating