பேரணாம்பட்டு: திருமணமான மறுநாளில் புதுப்பெண் தீக்குளிப்பு!!
ஆம்பூரை அடுத்த தேவலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 26). இவருக்கும், பேரணாம்பட்டு பாகர்உசேன் தெருவை சேர்ந்த அருளரசி (23) என்ற பெண்ணுக்கும் நேற்று முன்தினம் ஆம்பூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது.
மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டும் நேரத்தில் அருளரசி திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இரு வீட்டாரும் அருளரசியை தேற்றி மணவறையில் அமர வைத்தனர். பின்னர் திருமணத்தை நடத்தி வைத்தனர்.
திருமணம் முடிந்ததும் மணமக்களை பெண் வீட்டார் நேற்று மாலை பேரணாம்பட்டுக்கு அழைத்து வந்தனர். மாலை 6.30 மணியளவில் மணமக்களை ஆரத்தி எடுத்து பெண் வீட்டார் வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர்.
இந்த நிலையில் அருளரசி உடையை மாற்றி வருவதாக கூறிவிட்டு ஒரு அறைக்கு சென்றார். ஆனால் அவர் அறையின் உள்ளே சென்றதும் திடீரென கதவின் உட்புறமாக தாழ்ப்பாளை போட்டார். அடுத்த சில நிமிடங்களில் அருளரசி தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
தீ உடல் முழுவதும் பரவியதால் அவர், கருகியவாறு துடிதுடித்தார். அவரின் அலறல் சத்தத்தை கேட்டு உறவினர்களும், குடும்பத்தாரும் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அருளரசியின் மீது எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்த அவர்கள் அருளரசியை பேரணாம்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருமணமான மறுநாள் மணக்கோலம் கலையாத நிலையில் புதுப்பெண் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் எதற்காக தற்கொலை செய்து கொள்ள முயன்றார் என்பது தெரியவில்லை.
இது குறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating