மார்த்தாண்டம் போலீசில் தஞ்சமடைந்த காதல் ஜோடி: பாதுகாப்பு கேட்டு மனு!!
பள்ளியாடியை அடுத்த வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அபினாஷ் (வயது 27). இவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்தார். அப்போது வெள்ளறடை பகுதியை சேர்ந்த சுல்பினா (22) என்பவரும் அங்கு நர்சாக பணிபுரிந்தார்.
ஒரே இடத்தில் வேலை பார்த்ததால் இருவரும் அடிக்கடி சந்தித்து கொண்டனர். இதில் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
அரசல்புரசாலாக இது வெளியே தெரிந்ததும் சுல்பினா அந்த ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறி இன்னொரு ஆஸ்பத்திரியில் பணிக்கு சேர்ந்தார். என்றாலும் அபினாசுடன் தொடர்ந்து பழகி வந்தார்.
அபினாஷ்–சுல்பினா காதல் விவகாரம் அவர்களின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இருவரும் வெவ்வேறு பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் பயந்து போன காதலர்கள் இன்று மார்த்தாண்டம் போலீஸ் நிலையம் வந்தனர். அங்கிருந்த போலீசாரிடம் அவர்கள் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தனர்.
இருவரின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் போலீசார் அவர்களை அழைத்து பேசி சமரசம் செய்து தாங்கள் சேர்ந்து வாழ உதவ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து போலீசார் இருவரின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்த பின்பே சமரச பேச்சு நடக்கும். அப்போது அபினாஷ்–சுல்பினா காதலை அவர்களின் பெற்றோர் ஏற்று கொள்வார்களா? என்பது தெரியவரும்.
Average Rating