மாணவர்களின் கையில் கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்த சம்பவம்: நடவடிக்கை எடுக்க பரிந்துரை!!
சேலம் மாவட்டம் தலைவாசல் ஊராட்சி, மும்முடியில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி உள்ளது. இங்கு 6 முதல் 12–ம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 65 மாணவர்கள் தங்கியிருந்து படித்து வருகிறார்கள்.
விடுதியில் மொத்தம் 7 அறைகள் உள்ளன. ஒரு அறையில் 7–ம் வகுப்பு மாணவன் ஜெயபிரகாஷ் உள்பட 13 மாணவர்கள் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் ஜெயபிரகாஷ் தனது பெட்டியில் வைத்திருந்த ரூ.110 திருட்டு போனதாக கூறப்படுகிறது. பணத்தை எடுக்கவில்லை என்றால் கையில் கற்பூரத்தை ஏற்றி சத்தியம் செய்ய வேண்டும் என்று மாணவர்கள் கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து மாணவன் ஜெயபிரகாஷ் முதலில் கையில் கற்பூரத்தை ஏற்றி சத்தியம் செய்தான். அதன் பின் வரிசையாக அவனது அறையில் தங்கியிருந்த மாணவர்கள் தனசேகர், ராம்கி, கண்ணன், கார்த்தி, பிரகாஷ், ராமமூர்த்தி, பிரபு, கலையரசன் உள்பட 12 மாணவர்கள் தாங்கள் அந்த பணத்தை எடுக்கவில்லை என்று கூறி கையில் கற்பூரத்தை ஏற்றி சத்தியம் செய்தனர். இதில் 12 மாணவர்களின் கையிலும் தீக்காயம் ஏற்பட்டது.
இது பற்றி மாணவர்கள் தங்களது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் இது பற்றி தகவல் அறிந்த கெங்கவல்லி தொகுதி எம்.எல்.ஏ சுபா, தாசில்தார் தேன்மொழி, மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் விடுதிக்கு சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது மாணவர்கள் விடுதி குறித்து ஏராளமான புகார்களை கூறினர்.
மேலும் ஆத்தூர் ஆர்.டி.ஓ. ஜெயராமன் நடத்திய விசாரணையில் விடுதி காவலாளி, வார்டன் ஆகியோர் விடுதிக்கு சரியாக வராததால் தான் மாணவர்கள் கையில் கற்பூரத்தை ஏற்றியுள்ள சம்பவம் நடந்துள்ளது என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சேலம் மாவட்ட கலெக்டருக்கு தனது அறிக்கையில் பரிந்துரை செய்தார்.
அதுபோல் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி (பொறுப்பு) பூவேந்திரன் நடத்திய விசாரணையில் காவலாளி, வார்டன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், விடுதி சரியாக பராமரிக்கப்படவில்லை என்றும், சென்னை ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனருக்கு பரிந்துரை செய்துள்ளார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating