விருதுநகரில் சிறுமி திருமணத்தை தடுத்த பெண் அதிகாரிக்கு மிரட்டல்: 2 பேர் கைது!!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கரியனேந்தலை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மனைவி முனியம்மாள். இவர்களது 14 வயது மகளுக்கும், கே.கரிசல்குளத்தைச் சேர்ந்த குருசாமி–செல்லாயி தம்பதியரின் மகன் மாரியப்பன்(21) என்பவருக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் மாவட்ட சமூக நல அலுவலர் பாண்டியம்மாள், ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் சைல்டு லைன் அமைப்பினர் அங்கு சென்று சிறுமியை மீட்டனர். அப்போது அவர்களுக்கும், மாரியப்பன் தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இருப்பினும் சிறுமியை மீட்ட அரசு அதிகாரிகள் அவரை காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த நிலையில் நேற்று விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சமூக நல அலுவலகத்தில் அதிகாரி பாண்டியம்மாள் அமர்ந்து பணி செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு ஒருவர் வந்து மிரட்டல் விடுத்துள்ளார். திருமணம் நடந்த பெண்ணை எப்படி அழைத்து செல்லலாம். அவரை உடனடியாக கொண்டு வந்து விடவேண்டும். இல்லாவிட்டால் மக்களை திரட்டி மறியல் போராட்டம் நடத்துவோம் என்று கூறி உள்ளார். மேலும் பெண் அதிகாரிக்கு மிரட்டலும் விடுத்து சென்றுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் சமூக நல அலுவலர் பாண்டியம்மாள் தெரிவித்தார். அவரது உத்தரவின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி மணமகன் மாரியப்பனின் தந்தை குருசாமி, தாய் செல்லாயி ஆகியோரை கைது செய்தனர். மேலும் பெண்ணின் பெற்றோர் காளிமுத்து–முனியம்மாள் மற்றும் மாரியப்பனை போலீசார் தேடி வருகின்றனர்.
Average Rating