7–ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது!!
சேலம் மாவட்டம் பெத்த நாயக்கன்பாளையம் அருகே உள்ள கல்யேறிப்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு மாணவி படையாச்சி பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வருகிறார். (மாணவிக்கு 11 வயது ஆகிறது)
அந்த மாணவி நேற்று காலையில் வழக்கம்போல் பள்ளிக் கூடத்திற்கு சென்றார். பின்னர் மாலையில் வகுப்புகள் முடிந்த பின்பு அவர் வீடு திரும்பினார்.
அவர் மாலை சுமார் 6.30 மணியளவில் கல்யேறிப் பட்டி அருகே நடந்து வந்துகொண்டிருந்தார். அவர் வீட்டுக்கு தனியாக நடந்து வருவதை பார்த்த கல்யேறிப்பட்டி டேங்க் ஆப்பரேட்டர் மகன் செல்வ குமார் (வயது25) திடீரென மாணவியை வழி மறித்து மாணவியிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.
மேலும் மாணவியின் வாயை பொத்தி, கடத்திக் கொண்டு செல்ல முயன்றதாக தெரிகிறது. இதில் பயந்து போன மாணவி உடனே சுதாரித்துக் கொண்டு தன்னை காப்பாற்றுங்கள் என்று அலறல் சத்தம் போட்ட வாறு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார்.
அவரது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து அந்த வாலிபரின் பிடியில் இருந்து மாணவியை மீட்டனர். மேலும் இது குறித்து ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் வாலிபர் செல்வகுமாரை பிடித்து போலீஸ் நிலையத்துக் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
இதையடுத்து மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து வாலிபர் செல்வகுமாரை கைது செய்து ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
Average Rating