கணவருடன் தகராறு: குழந்தையை உயிரோடு எரித்து கொன்ற தாய்!!
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சரவணன். இரு சக்கர வாகன மெக்கானிக் தொழிலாளி. இவர், அதே பகுதியை சேர்ந்த லோகநாயகி (வயது 25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கணவன், மனைவி இருவரும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக திருப்பதிக்கு சென்றனர்.
திருப்பதி எஸ்.சி.வி.நகரில் ஒரு வாடகை வீட்டில் தங்கி வசித்து வந்தனர். அவர்களுக்கு சசிகரன் என்ற 3 மாத ஆண் குழந்தை இருந்தது. சரவணன் திருப்பதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். அவர், சம்பாதிக்கும் பணம் குடும்பத்துக்கு போதுமானதாக இல்லை என கூறப்படுகிறது. பணப்பிரச்சினையாலும், கடன் தொல்லையாலும் சிக்கித்தவித்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், வாடகை வீடும் சரியில்லை என்பதால், வேறொரு வீட்டுக்கு குடிப்பெயர்ந்தார். நேற்று முன்தினம் புதிய வீட்டுக்கு பொருட்களை எடுத்து செல்லும் பணியில் சரவணன் ஈடுபட்டிருந்தார்.
கணவனின் செயல் மீது மனைவி லோகநாயகி அதிருப்தியுடன் மனமுடைந்த நிலையில் இருந்தார். இந்த நிலையில் லோகநாயகி தன்னுடைய 3 மாத பச்சிளம் ஆண்குழந்தையின் உடல் மீது மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து விட்டு, தன் மீதும் தீ வைத்துக்கொண்டார்.
தீயில் கருகிய குழந்தை அலறித்துடித்ததோடு, லோகநாயகியும் கூச்சலிட்டார். அவர்களின் அலறல் சத்தத்தை கேட்டதும், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தாயையும், குழந்தையையும் மீட்டு சிகிச்சைக்காக திருப்பதி ருயா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு, சிகிச்சை பலனின்றி பச்சிளம் ஆண் குழந்தையான சசிகரன் பரிதாபமாக இறந்தது. லோகநாயகி கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து திருப்பதி கிழக்குப்பிரிவு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அப்பண்ணா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating