காதலியிடம் சில்மிஷம் செய்த வாலிபரை காரில் கடத்தி தாக்குதல்: காதலன் உட்பட 5 பேர் கைது!!
கோயம்பேட்டை சேர்ந்தவர் அருண். இவர் அதே பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாடகியாக இருக்கும் அயனாவரத்தை சேர்ந்த சுதாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) காதலித்து வந்தார்.
நேற்று இரவு வேலை முடிந்து சுதா கோயம்பேட்டில் இருந்து மாநகர பஸ்சில் (46ஜி) வீட்டுக்கு சென்றார். அப்போது அருகே நின்ற வாலிபர், சுதாவை கிண்டல் செய்து சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து சுதா செல்போனில் காதலன் அருணுக்கு தகவல் கூறினார். அவர் நண்பர்கள் 4 பேருடன் காரில் மாநகர பஸ்சை பின் தொடர்ந்து வந்தார்.
ஐ.சி.எப். அருகே வந்த போது பஸ்சை வழிமறித்த அவர்கள் அந்த வாலிபரை நைசாக பேசி கீழே இறக்கினர். பின்னர் அவரை சரமாரியாக தாக்கி காரில் தூக்கி போட்டு கடத்தி சென்றனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியில் நின்ற ஒருவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கடத்தல் குறித்து கூறினார். உஷாரான போலீசார் இது பற்றி கோயம்பேடு பஸ்நிலைய போலீசுக்கு தகவல் தெரிவித்து கடத்தல் கும்பலை மடக்கி பிடிக்க உத்தரவிட்டனர்.
இன்ஸ்பெக்டர் ஹரிக்குமார் தலைமையில் போலீசார் அனைத்து சோதனை சாவடிகளுக்கும் காரின் பதிவு எண் குறித்து தெரிவித்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனால் நள்ளிரவு போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் கடத்தல் கார் கோயம்பேட்டில் உள்ள தியேட்டர் அருகே நிற்பது தெரிந்தது. போலீசார் விரைந்து சென்று காரில் இருந்த அருண் மற்றம் அவரது நண்பர்கள் முத்து ராஜ், ராஜா, ராபர்ட், அரும்பாக்கம் வினோத் ஆகியோரை பிடித்தனர். இதில் முத்துராஜ் அரசியல் கட்சி பிரமுகர் ஆவார்.
விசாரணையில் ‘‘காதலியிடம் தவறாக நடந்ததால் நண்பர்களுடன் சேர்ந்து வாலிபரை காரில் கடத்தி தாக்கியதாக’’ அருண் தெரிவித்தார். மேலும் காயம் அடைந்த வாலிபரை கோயம்பேடு அருகே இருளில் இறக்கி விட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்ற போது வாலிபர் இல்லை.
அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை
பிடிபட்ட 5 பேர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
இச்சம்பவத்தால் நேற்று இரவு கோயம்பேடு பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
Average Rating