காங்கயம் அருகே கிணற்றில் குதித்து 10–ம் வகுப்பு மாணவன் பலி!!
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகேயுள்ள சாம்பவலசை சேர்ந்தவர் செல்வன் (வயது 42). விவசாயி. இவரது மனைவி ஜெயா (40). இவர்களுக்கு சூர்யா (15) என்ற மகன் உள்ளார்.
இவர் அருகிலுள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற சூர்யா பள்ளி முடிந்து வீடு திரும்பினார்.
அப்போது தாய் ஜெயா மகனை கண்டித்தார். இதனால் தாய்க்கும், மகனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனமுடைந்த சூர்யா கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறி தோட்டத்துக்கு சென்றார். அங்குள்ள கிணற்றில் குதித்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் ஜெயா மகனை காப்பாற்ற கிணற்றுக்குள் குதித்தார். ஆனால் அவருக்கு நீச்சல் தெரியாததால் கிணற்றில் தத்தளித்தார். ஜெயாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கிணற்றில் குதித்து ஜெயாவை மீட்டனர்.
ஆனால் சூர்யா பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்த தகவலறிந்ததும் காங்கயம் போலீசார் விரைந்து வந்து சூர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மயக்க நிலையில் இருந்த ஜெயா காங்கயம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தாய்க்கும், மகனுக்கும் எதற்காக தகராறு நடந்தது? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Average Rating