நெல்லை அருகே மனைவியை கொன்று வாலிபர் தற்கொலை!!
நெல்லை மாவட்டம் சிவகிரி சந்தி விநாயகர் தெருவை சேர்ந்தவர் திருப்பதி (வயது32). டிராக்டர் டிரைவர். இவரது மனைவி முனீஸ்வரி (24). இவர்களுக்கு ஜீவா (5), ரஞ்சனி (2) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் திருப்பதி –முனீஸ்வரிடையே பணம் செலவு செய்வது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இன்று அதிகாலை கணவன்– மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது முனீஸ்வரி கணவனிடம் ஆவேசமாக பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த திருப்பதி அருகே கிடந்த கயிற்றால் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். மனைவி இறந்ததை உறுதி செய்த திருப்பதி போலீசுக்கு பயந்து தானும் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இன்று காலை நீண்ட நேரமாகியும் திருப்பதியின் வீட்டின் கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது அங்கு திருப்பதி, முனீஸ்வரி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுபற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது உடலை போலீசுக்கு தெரியாமல் எரிக்க முயன்றனர். இதுகுறித்து போலீசாருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.
உடனடியாக சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து திருப்பதியின் உடலை எரிக்க விடாமல் தடுத்து மீட்டனர்.
மேலும் முனீஸ்வரி– திருப்பதி ஆகிய இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தாய், தந்தையை இழந்து அனாதையான பச்சிளம் குழந்தைகள் இருவரையும் பார்த்த பொதுமக்கள் கண்கலங்கினர்.
இச்சம்பவம் குறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை கொன்று திருப்பதி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சிவகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating