நெல்லை அருகே 4 மாதமாக சிறை வைத்து பள்ளி மாணவி கற்பழிப்பு: ரவுடி கைது!!
நெல்லை அருகே உள்ள தென்கலம்புதூர் புதுக்காலனியை சேர்ந்தவர் லலிதா (வயது 14, பெயர் மாற்றப்பட்டுள்ளது). அங்குள்ள பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வந்தாள்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்ற லலிதா அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவளை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து மானூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் லலிதா எங்கு சென்றாள்?, யாராவது அவளை கடத்தி சென்றார்களா? என்று விசாரணை நடத்தி அவளை தேடி வந்தனர்.
இந்நிலையில் லலிதாவை தென்கலம்புதூரை சேர்ந்த பிரபல ரவுடி குமார்(36) கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குமாரையும், லலிதாவையும் தேடி வந்தனர். இன்று காலை மானூர் அருகே உள்ள கானார்பட்டி விலக்கு பகுதியில் குமாரும், லலிதாவும் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமாரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து லலிதாவை மீட்டனர்.
கைதான குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் லலிதாவை வெளியூருக்கு கடத்தி சென்று 4 மாதமாக சிறை வைத்து கற்பழித்துள்ளது தெரிய வந்தது. ஏற்கனவே இது போன்று 2 பெண்களை கடத்தி சென்று கற்பழித்துள்ளதும் தெரிய வந்தது. மேலும் அவர் மீது ஒரு கொலை வழக்கும் உள்ளது.
இதையடுத்து போலீசார் குமார் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் பரபரப்பு தகவல் வெளியாகும் என தெரிகிறது. பள்ளி மாணவி சிறை வைத்து கற்பழிக்கப்பட்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating