தக்கலை அருகே நிச்சயதார்த்தத்திற்கு முந்தைய நாள் நர்சு மாயம்!!
தக்கலை அருகே மேக்கா மண்டபம் பகுதியை சேர்ந்தவர் மேபல். தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்த இவருக்கும், குளச்சல் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் திருமணம் நடத்தி வைக்க இருவீட்டாரும் முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த 2 மாதங்களுக்கு முன் மேபலின் வீட்டிற்கு சென்ற மணமகன் குடும்பத்தார் அவருக்கு மோதிரம் அணிவித்தனர்.
அதுபோல், மேபலின் குடும்பத்தாரும் மணமகன் வீட்டுக்கு சென்று அவருக்கு மோதிரம் அணிவித்தனர். இதன் மூலம் திருமணம் நடத்துவதை உறுதி செய்ததோடு நேற்று நிச்சயதார்த்தம் நடத்த இருந்தனர்.
இதையொட்டி, மணமகன் வீட்டில் பந்தல், சமையல் ஏற்பாடுகள் என விழாக்கோலம் பூண்டதோடு அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தன.
இந்நிலையில், நிச்சயதார்த்தத்தின் முந்தைய நாளான நேற்று முன்தினம் மணமகன் வீட்டுக்கு மேபலின் வீட்டில் இருந்து செல்போனில் தொடர்பு கொண்டு நிச்சய தார்த்தம் நடத்த முடியாது என கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மணமகன் குடும்பத்தினர் மேபலின் வீட்டிற்கு படையெடுத்தனர். அங்கு சென்ற போது தான் அவர் முந்தைய நாள் இரவில் அதே பகுதியை சேர்ந்த தன் காதலருடன் தலைமறைவாகி விட்டார் என்பது தெரிய வந்தது.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்படவே, மேபலின் வீட்டார் தக்கலை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் இருவீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், மேபலின் தந்தை தக்கலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில், மருத்துவமனைக்கு செல்வதாக கூறி சென்ற தனது மகள் வீட்டிற்கு திரும்ப வில்லை. அவரை கண்டு பிடித்து தரவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து தக்கலை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராஜமார்த்தாண்டன் புகாரை பெற்று கொண்டு விசாரித்து வருகிறார்.
Average Rating