கடையம் அருகே பள்ளி மாணவிகளை தாக்கிய வாலிபர்களை பிடிக்க போலீஸ் தீவிரம்!!
நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல்புதூரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு படித்து வரும் 4 மாணவிகளிடம் 5 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி ஆபாசமாக பேசியுள்ளனர்.
மேலும் செல்போனில் ஒரு மாணவியுடன் இருப்பது போல் படம் எடுத்து அதை காட்டி மிரட்டியுள்ளனர். பயந்து போன அந்த மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் தங்களது வீட்டிற்கு சென்று பெற்றோர்களிடம் வாலிபர்கள் மிரட்டியது குறித்து கூறினர்.
இதையடுத்து மாணவிகளின் பெற்றோர் சம்பந்தப்பட்ட வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவிகளை மிரட்டியது பொட்டல் புதூர் அருகே உள்ள திருமலையப்பபுரம் பஜனை மடத்தெருவை சேர்ந்த பக்கீர் மைதீன் மகன் முகமது ஜெய்லுதீன் ஆசாத் (19), அதே பகுதியை சேர்ந்த கணேசன், சுடலை மாரி, தங்கமாரி மற்றும் பொட்டல் புதூரை சேர்ந்த செல்லப்பா மகன் கிருஷ்ணசாமி (19) என்பது தெரியவந்தது. இதில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவரான முகமது ஜெய்லுதீன் ஆசாத், கிருஷ்ணசாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்ற 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை பொட்டல் புதூர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒரு சில மாணவிகள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது முகமூடி அணிந்து வந்த 2 வாலிபர்கள் நடந்து சென்ற 2 மாணவிகளை கத்தியை காட்டி மிரட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்து அந்த வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவிகளின் பெற்றோர் மற்றும் ஏராளமான கிராம மக்கள் கடையம் –பொட்டல்புதூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆழ்வார்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். போலீசாரின்முதல் கட்ட விசாரணையில் ஏற்கனவே கைதான முகமது ஜெய்லுதீன் ஆசாத்தின் நண்பர்கள் 2 பேர் மாணவிகளை மிரட்டி விட்டு சென்றது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு நெல்லை மாவட்ட எஸ்.பி.நரேந்திரன்நாயரும் வந்து விசாரணை நடத்தினார். தப்பியோடிய வாலிபர்களை அம்பை டி.எஸ்.பி.மணிமாறன் தலைமையிலான போலீசார் தேடி வருகின்றனர்.
Average Rating