இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற சம்பவம்: சந்திர திரிகோண மலையில் காதல் ஜோடிகளுக்கு தடை!!
சிக்மகளூர் அருகே உள்ள சந்திர திரிகோண மலையில் சமீபத்தில் இளம்பெண்ணை அவரது காதலன் கற்பழித்து கொலை செய்தார். இதன் எதிரொலியாக அந்த பகுதிக்கு காதல் ஜோடிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிக்மகளூர் அருகே பிரசித்திப் பெற்ற சுற்றுலா தலமாக சந்திர திரிகோண மலை உள்ளது. இந்த மலையை தொடர்ந்து முல்லையன்கிரி மலை, பாபாபுடன் கிரி மலை, மாணிக்கதாரா, ஒன்னம்மன், சகீர் ஆகிய அருவிகள் உள்ளன. இதில் சந்திர திரிகோண மலை மிகவும் புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும்.
மழை பெய்யும் காலங்களில் இந்த மலையில் இருந்து மற்ற மலைகளின் பச்சைபசேல் காட்சியை காணவும், நீர்வீழ்ச்சிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரின் அழகை ரசிக்கவும் நாள்தோறும் இந்த மலைக்கு 1,000–க்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹாசன் மாவட்டம் அரிசிக்கெரே தாலுகா பானாவரா பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண் தனது காதலனுடன் சந்திர திரிகோண மலைக்கு வந்தார்.
பின்னர் இளம்பெண்ணின் காதலன் அவரை வலுக்கட்டாயப்படுத்தி கற்பழித்து கொலை செய்து தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் சிக்மகளூர் மற்றும் ஹாசன் ஆகிய மாவட்டங்களில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இதன் எதிரொலியாக சந்திர திரிகோண மலைக்கு இளம் காதல் ஜோடிகள் செல்ல வனத்துறையினர் கடந்த 3 மாதங்களாக தடை விதித்து உள்ளனர். இதனால் சிக்மகளூர் அருகே சந்திர திரிகோண மலைக்கு வரும் சாலையில் உள்ள கைக்கம்பா சோதனை சாவடியிலேயே பாதுகாப்பு பணியில் உள்ள வனத்துறையினர் காதல் ஜோடிகளை திருப்பி அனுப்பி விடுகிறார்கள். இதன் காரணமாக காதல் ஜோடிகள் கடந்த 3 மாதங்களாக ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள்.
மேலும் புதுமண தம்பதிகளும் தங்களின் குடும்பத்துடன் சென்றால் மட்டுமே சந்திர திரிகோண மலைக்கு செல்ல வனத்துறையினர் அனுமதி அளிக்கிறார்கள். அதே போல் சந்திர திரிகோண மலைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் வாகனத்தையும் வனத்துறையினர் சோதனை செய்து அனுப்பி வருகிறார்கள். இந்த சோதனையில் தினமும் 100–க்கும் மேற்பட்ட மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Average Rating