பாப்பாரப்பட்டியில் செக்ஸ் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டிய போலீஸ் ஏட்டு!!
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பெண்களை குறிவைத்து ஒரு ஏட்டு அத்து மீறியுள்ளார். அவர் விசாரணை என்ற பெயரில் அந்த பெண்களின் வீட்டிற்கே நேரடியாக சென்று அவர்களை தனது இச்சைக்கு கட்டாயப்படுத்தி உள்ளார்.
இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலப்பிரச்சினை தொடர்பாக புகார் கொடுக்க சென்ற ஒரு பெண்ணுக்கும் அவர் தொல்லை கொடுத்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போனார்.
போலீஸ் ஏட்டுவின் தொல்லை தாங்க முடியாமல் அந்த பெண் பரபரப்பு வீடியோ ஆதாரத்தை வெளியிட்டார். அதில் போலீஸ் ஏட்டு கொடுத்த தொல்லைகள் குறித்து தெரிவித்து இருந்தார்.
இந்த தகவல் வெளியே வந்ததும் தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டுவின் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சம்பந்தப்பட்ட நபரை வரவழைத்து விசாரணை நடத்தி அனுப்பி விட்டார்.
இதையடுத்து நேற்று மாலை வேறு பகுதியை சேர்ந்த போலீஸ் சூப்பிரண்டுவின் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு ஒருவர் அந்த பெண் வீட்டிற்கு சென்று உள்ளார். அப்போது அவர் அந்த பெண்ணை எப்படி நீ இதுப்பற்றி வெளியில் சொல்லலாம் என்று மிரட்டியுள்ளார். அதோடு இல்லாமல் பெங்களூரில் உள்ள அவரது மாற்று திறனாளி கணவரையும் மிரட்டியுள்ளார். இதனால் அவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:–
வேலியே பயிரை மேய்வது போல் புகார் கொடுக்க வரும் பெண்களை போலீஸ் ஏட்டு தொல்லை கொடுத்து வந்தது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. ஆனாலும் அவரிடம் விசாரணை நடத்தி விட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அனுப்பி வைத்து விட்டனர்.
எனவே இது போன்றவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு அல்லது வருவாய்த்துறையை சேர்ந்த பெண் அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தி உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
போலீஸ் ஏட்டு மீது செக்ஸ் குற்றச்சாட்டு சொன்ன பெண்ணையே ஏட்டு ஒருவர் மிரட்டிய சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating