சாலையை கடக்கும்போது செல்போனில் பேசினால் ரூ.200 அபராதம்: கேரள போலீசார் நடவடிக்கை!!
சாலை விதிகளை வாகன ஓட்டுனர்களும் சாலையில் நடந்து செல்பவர்களும் சரியாக கடை பிடிக்காததால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. மேலும் விபத்துகளால் ஏற்படும் உயிர்பலியும் சமீபத்தில் அதிகரித்துள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் போக்குவரத்து போலீசார் போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக அமுல்படுத்தி வருகிறார்கள். இங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் இங்கு காமிராக்கள் பொருத்தி சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
அதன்படி வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசினால் ஓட்டுனர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. 3 முறைக்கு மேல் ஒருவர் அபராதம் கட்டினால் அவரது வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
இந்த நிலையில் சாலையை கடப்பவர்களும் சாலை விதிகளை சரிவர கடைபிடிப்பதில்லை என்பதால் இனி சாலையை கடக்கும்போது பொதுமக்கள் செல்போனில் பேசிக்கொண்டோ அல்லது ஹெட்போன் மூலம் பாட்டு கேட்டு கொண்டோ சென்றால் அவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
சாலை விதிகளை கடைப்பிடிக்காதவர்களை ரகசிய காமிரா மூலம் கண்காணித்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் வருகிற 1–ந் தேதி முதல் இது அமுல்படுத்தப்படும் என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
Average Rating