ஆரல்வாய்மொழி அருகே திருமணம் நடக்க இருந்த மணப்பெண் காதலனுடன் ஓட்டம்!!
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தை அடுத்த எட்டு கூட்டுதேரிவிளையைச் சேர்ந்தவர் ஜெயசுபா. இவருக்கும், வெள்ளமடம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் பெற்றோர் திருமணம் பேசி நிச்சயதார்த்தம் செய்து இருந்தனர்.
இவர்களின் திருமணம் இன்று நடைபெறுவதாக இருந்தது. இதற்காக அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் வினியோகிக்கப்பட்டது. இதற்கிடையே ஜெயசுதா பெற்றோரிடம் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும், வாலிபர் ஒருவரை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறினார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கும் நேரத்தில் இதை எப்படி ஏற்றுக்கொள்வது என்று கேட்டதோடு மகளை நெல்லை மாவட்டம் தட்டார்மடத்தில் உள்ள உறவினர் வீட்டில் பாதுகாப்பாக தங்க வைத்தனர்.
திருமணத்துக்கு 2 நாட்கள் இருக்கும் நிலையில் ஜெயசுதா தனது காதலனை ரகசியமாக தொடர்பு கொண்டார். இருவரும் பேசி வைத்து நேற்று திடீரென மாயமாகி விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயசுதாவின் பெற்றோர் தென்தாமரை குளம் போலீசில் புகார் செய்தனர்.
மகளை அவரது காதலன் கடத்திச் சென்று இருப்பதாகவும், அவரிடம் இருந்து மகளை மீட்டு தரும்படியும் கூறியிருந்தனர்.
இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் மணப்பெண் மாயமான தகவல் வெள்ளமடத்தில் உள்ள மணமகன் வீட்டாருக்கு தெரியவந்தது. அவர்கள் உடனே அவசர, அவசரமாக மற்றொரு பெண்ணை தேர்வு செய்தனர். அந்த பெண்ணுடன் மணமகனுக்கு இன்று திருமணம் நடந்தது.
Average Rating