பள்ளிக்கு போக சொல்லி பெற்றோர் வற்புறுத்தியதால் கடத்தல் நாடகமாடிய மாணவன்!!
ஆம்பூர் கிருஷ்ணாபுரம் எஸ்.கே.ரோடு பகுதியை சேர்ந்தவர் பாலச்சந்திரன். பங்க் கடை வைத்துள்ளார். அவரது மகன் விக்னேஷ் (வயது 16), ஆம்பூரில் உள்ள அரசு நிதியுதவி பெறும் ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று காலை விக்னேஷ் வழக்கம் போல பள்ளிக்கு சென்றார். ஆனால் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் விக்னேஷை அவரது பெற்றோர் தேட ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் அவரது தந்தையின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர் விக்னேஷை கடத்தி சென்றுள்ளதாகவும், ஒரு லட்சம் கொடுத்தால்தான் விடுவிப்போம் என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாலச்சந்தர் இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தினர்.
கடத்தல் போன் வந்த நம்பர் குறித்து போலீசார் ஆய்வு செய்தனர். அந்த எண் ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து 1 ரூபாய் காயின் போனில் பேசியது தெரியவந்தது.
இதனையடுத்து ஆம்பூர் போலீசார் உடனடியாக சித்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று காயின் போன் இருந்த கடையில் விசாரணை நடத்தினர். அப்போது போனில் மாணவன் ஒருவன் பேசியது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அந்த வியாபாரியை அழைத்து கொண்டு சித்தூரில் தேடிய போது பஸ் நிலையத்தில் நின்ற கொண்டிருந்த அந்த மாணவன் சிக்கினான்.
போலீசார் அவனை பிடித்து விசாரித்த போது கடத்தப்பட்டதாக கூறப்பட்ட ஆம்பூர் மாணவன் விக்னேஷ் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஆம்பூர் போலீஸ் சித்தூர் சென்று மாணவனை ஆம்பூருக்கு அழைத்து வந்தனர்.
மாணவனிடம் ஆம்பூர் டி.எஸ்.பி. கணேஷ், இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் யார் கடத்தியது என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது மாணவன் யாரும் கடத்தவில்லை. நான் தான் வீட்டை விட்டு சென்றேன். அப்பா பள்ளி கூடத்துக்கு போ ஒழுங்காக படி என்று அடிக்கடி டார்ச்சர் செய்ததால் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று திட்டமிட்டேன். அதன்படி நேற்று மதியம் உணவு இடைவேளையின் போது பள்ளியிலிருந்து வெளியேறி ஆம்பூரிலிருந்து பஸ் ஏறி சித்தூருக்கு சென்றேன்.
பின்னர் எங்கு செல்வது என்று திணறினேன். அப்போது தான் அப்பா தேடுவார் என்ற எண்ணம் வந்தது. உடனே 1 ரூபாய் காயின் போனிலிருந்து எண்ணை கடத்தி வந்துவிட்டதாகவும் ரூ.1 லட்சம் பணம் வேண்டும் என்று கூறினேன். பின்னர் வந்து போலீசார் என்னை பிடித்து விட்டனர் என்று கூறியுள்ளான்.
இதனையடுத்து மாணவனை எச்சரித்த போலீசார் இனிமேல் இதுபோல் இருக்க கூடாது என்று அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
வேலூர் மாவட்ட போலீசாரை சுமார் 10 மணி நேரம் கடத்தல் நாடகமாடி அலைக்கழித்த மாணவனால் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Average Rating