ஆண் குழந்தையை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி வீச்சு: கள்ளக்காதலன்– காதலி கைது!!
நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள திருக்கண்ணபுரம் ஊராட்சி சின்னையன் தோப்பு பகுதியில் வாய்க்காலில் சாக்கு மூட்டை கிடந்தது.
அதனை நாய்கள் கடித்து குதறி கொண்டிருந்தது. இதனை பார்த்த பொது மக்கள் திட்டச்சேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு வந்து சாக்கு மூட்டையை பிரித்து பார்த்த போது அதில் பிறந்து 10 நாட்களே ஆன ஆண் சிசு பிணம் இருந்தது.
அதன் கழுத்தை இறுக்கி கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வீசி இருப்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் கேள்விப்பட்டதும் நாகை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு உஷா, டி.எஸ்.பி. சகாய் சாங், இன்ஸ்பெக்டர் செங்கமலக் கண்ணன், சப்–இன்ஸ்பெக்டர்கள் சண்முகப்பிரியா, ரமேஷ் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் ஆண் சிசுவை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி வீசியது யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது ஆண் சிசுவை கொன்று வீசியது திருக்கண்ணபுரம் சின்னையன் தோப்பு பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகள் உமா மற்றும் பெருங்கடமனூர் பாக்கியராஜ் என்பது தெரிய வந்தது.
உமாவுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் இறந்து விட்டார். அவரது வீட்டிற்கு பாக்கியராஜ் அடிக்கடி வந்து சென்றார்.
அப்போது இருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதில் உமா கர்ப்பம் அடைந்தார். இதனால் அவர் வெளியே நடமாடாமல் வீட்டில் இருந்து வந்தார். அவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது.
கள்ளக்காதலில் பிறந்ததால் அதனை வளர்க்க விரும்பவில்லை. இதனால் உமா மற்றும் பாக்கியராஜ் ஆகியோர் சேர்ந்து குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றனர்.
பின்னர் அதனை சாக்கு மூட்டையில் கட்டி சின்ன தோப்பு வாய்க்காலில் வீசியது தெரிய வந்தது.
ஆண் சிசுவை கொன்றதாக உமா மற்றும் பாக்கியராஜை போலீசார் கைது செய்தனர். பிணத்தை பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating