பஞ்சாயத்து தலைவருடன் தங்கியிருந்த கணவரை கடத்த முயன்ற மனைவி உள்பட 5 பேர் கைது!!
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் மோகன்(வயது44). இவரது மனைவி அனுசுயாதேவி(34). சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த இவர்களுக்கு 1 ஆண்குழந்தை உள்ளது.
மோகனுக்கு ஏற்பட்ட மது பழக்கம் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. கணவன் தன்னை அடித்து சித்ரவதை செய்வதாக அனுசுயாதேவி ஆண்டிப்பட்டி மகளிர் காவல்நிலையத்தில் கடந்த மாதம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மோகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஜாமீனில் வெளிவந்த மோகன் தனது உறவினரான தேவாரம் டி.மீனாட்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரேசன் வீட்டில் தங்கியிருந்தார். அவரது வீடு டி.மேட்டுப்பட்டியில் உள்ளது. நேற்று 4 பேர் சுந்தரேசன் வீட்டிற்கு காரில் வந்தனர்.
தங்களை போலீசார் என்று அறிமுகப்படுத்திய அவர்கள் ஒரு வழக்கு விசாரணைக்காக மோகனை போலீஸ் சூப்பிரண்டு அழைத்து வர கூறியுள்ளார் என்றனர். அவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பதை அறிந்த சுந்தரேசன் மோகனை உங்களுடன் அனுப்ப முடியாது என்றார்.
இதனால் அவரை தாக்கி மோகனை அடித்து இழுத்து சென்றனர். மோகனை காரில் கடத்திச்செல்ல முயன்றபோது அப்பகுதி மக்கள் திரண்டு வந்து மடக்கிபிடித்து தேவாரம் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் மோகனின் மனைவி அனுசுயாதேவி தூண்டுதல்பேரில் சென்னையை சேர்ந்த கூலிப்படையினர் செல்வம், மகேஷ், சியாம், குகன்ஸ்டீபன் ஆகியோர் கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அனுசுயாதேவி உள்பட 5 பேரையும் கைது செய்தனர்.
மேலும் இவர்கள் மோகனை ஏன் கடத்த முயன்றனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating