குடியாத்தம் அருகே மூதாட்டியை கொலை செய்ய தூண்டிய பெண் கைது!!
குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி ஊராட்சி அனுப்பு பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி அம்சா (வயது 65).
மகள்கள் கஸ்தூரி, அஞ்சலி ஆகியோருக்கு திருமணமாகி விட்டதால் அம்சா அனுப்பு பகுதியில் சாலை ஓரத்தில் குடிசை அமைத்து குடியிருந்து வந்தார். அங்கேயே பெட்டிக்கடை வைத்து இட்லிக்கடையும் நடத்தி வந்தார்.
கடந்த மாதம் அம்சா மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது மூக்கிலும், வாயிலும் ரத்தம் வழிந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மதிவாணன், விஜயகுமார் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் அனுப்பு பகுதியை சேர்ந்த முனிராஜ் மகன் நாகராஜ் (வயது28) என்பவர் அம்சா கொலை சம்பவம் தொடர்பாக கல்லப்பாடி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமாரிடம் சரணடைந்தார். அவரை பரதமராமி போலீசில் கிராம நிர்வாக அலுவலர் ஒப்படைத்தார்.
இதனையடுத்து நாகராஜை போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
ஜெயிலில் அடைக்கப்பட்ட நாகராஜை உறவினர்கள் பார்க்க சென்றனர். அவர்களிடம் நாகராஜ் அனுப்பு கிராமத்தில் டிபன் கடை நடத்தும் மஞ்சுளா (வயது 35) கடைக்கு அடிக்கடி செல்வேன். அம்சா கடையால் தனக்கு வியாபாரம் பாதிக்கப்படுகிறது.
அவரை தீர்த்து கட்டினால் வியாபாரம் நன்றாக நடக்கும்.அம்சாவின் வீட்டில் அதிக பணம் இருக்கிறது எனக் கூறி மஞ்சுளா என்னை கொலை செய்ய தூண்டி விட்டார். ஆனால் மஞ்சுளா என்னை ஜெயிலில் வந்து பார்க்கவும் இல்லை. ஜாமீனில் வெளியே எடுக்கவும் இல்லை எனக் கூறினார்.
இதனைக் கேட்டு திடுக்கிட்ட நாகராஜின் உறவினர்கள் இதுபற்றி பரதராமி போலீசாரிடம் தெரிவித்தனர். விசாரணையில் மஞ்சுளா டிபன் கடை நடத்தும் போட்டியில் அம்சாவை கொலை செய்ய தூண்டியது தெரியவந்தது.
போலீசார் வழக்கு பதிவு செய்து மஞ்சுளாவை கைது செய்தனர்.
Average Rating