கருக்கலைப்புக்கு கோர்ட்டிடம் அனுமதி கோரிய 16 வயது சிறுமியின் மனு தள்ளுபடி!!
அரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா மாவட்டத்தை சேர்ந்த தங்களின் 16 வயது மகளை காணவில்லை என அவளது பெற்றோர் கடந்த ஏப்ரல் மாதம் போலீசில் புகார் அளித்தனர்.
அந்தப் பெண்ணை தேடிவந்த போலீசார், கடந்த ஜூலை மாதம் அவளை கண்டுபிடித்து, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
திருமண ஆசை காட்டி அந்த சிறுமியை வீட்டை விட்டு அழைத்துச் சென்று, மறைவான இடத்தில் தங்கவைத்து கற்பழித்ததாக சுர்ஜித் குமார் என்ற வாலிபர் உள்பட 7 பேர் மீது அம்பாலா மாவட்டத்தின் பிம்லேஷ் தன்வரில் உள்ள விரைவு நீதி மன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், சுர்ஜித்துடன் சென்று தனியாக வாழ்ந்தபோது தனக்கு உண்டான கருவைக் கலைக்க சட்டபூர்வமாக அனுமதி அளிக்குமாறு இந்த வழக்கை விசாரித்துவரும் இதே விரைவு நீதி மன்றத்தில் அந்த சிறுமி மனு தாக்கல் செய்தார்.
ஒரு குழந்தையை பெற்றெடுக்கும் உடல்திறனும், மனவலிமையும் தனக்கு இல்லாததால் இந்த கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ள அந்த சிறுமி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அந்த சிறுமியின் சார்பில் அவளது பெற்றோர் தாக்கல் செய்துள்ள மனுவின் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது சிறுமியின் வாக்குமூலத்தை நீதிபதி பதிவு செய்துக் கொண்டார்.
இந்த கருக்கலைபுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் முக்கிய குற்றவாளியும், அந்தக் கருவுக்கு காரணமான நபருமான சுர்ஜித் குமார், தனக்கும் அந்தப் பெண்ணுக்கும் சட்டப்படி திருமணம் நடந்துள்ளதால், இந்த கருக்கலைப்புக்கு கோர்ட் அனுமதி வழங்கக் கூடாது என்று மாவட்ட நீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனுவினை தாக்கல் செய்தார்.
இன்று (சனிக்கிழமை) மீண்டும் இம்மனுவின் மீது விசாரணை நடத்திய விரைவு கோர்ட் நீதிபதி, கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்க மறுத்து, சிறுமியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.
Average Rating