தகராறை தட்டிக்கேட்டதால் பஞ்சாயத்து தலைவரின் கைவிரலை கடித்து துப்பிய தொழிலாளி!!
கோவையை அடுத்த நெகமம் அருகேயுள்ள பனப்பட்டி ஊராட்சி தலைவராக இருப்பவர் சதாசிவம் (வயது 48).
இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் முருகேசன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சசிகலா. குடிப்பழக்கம் உள்ள முருகேசன் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியுடன் சண்டை போடுவார்.
வழக்கம் போல போதையில் வந்த முருகேசன் தனது மனைவியுடன் சண்டை போட்டார். வாய்க்குவந்தபடி திட்டினார். பொறுமையிழந்த சசிகலா பக்கத்து வீட்டில் உள்ள பஞ்சாயத்து தலைவரிடம் ‘எனது கணவர் என்னிடம் சண்டைக்கு வருகிறார். அவரை தட்டிக்கேளுங்கள்’ என்றார்.
உடனே சதாசிவம் அங்கு வந்து முருகேசனை சத்தம் போட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ‘என்னை தட்டிக்கேட்க நீ யார்?’ என்று ஆவேசமாய் பேசிய முருகேசன் திடீரென்று பஞ்சாயத்து தலைவர் சதாசிவத்தின் வலது கை ஆள்காட்டி விரலை கடித்து துப்பினார். பின்னர் அங்கிருந்து ஓடி விட்டார். வலியால் அலறி துடித்த பஞ்சாயத்து தலைவர் சதாசிவத்தை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விரலை பறிகொடுத்த சதாசிவம் நெகமம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான முருகேசனை தேடி வருகிறார்கள். பஞ்சாயத்து தலைவரின் கைவிரலை தொழிலாளி கடித்து துப்பிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating