காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவியை பீர் பாட்டிலால் குத்திய வாலிபர்!!
திருவெண்ணைநல்லூர் அருகே ஏனாதிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் நீலகண்டன், விவசாயி. இவரது மகள் சாந்தி (வயது 19) இவர் திருவெண்ணைநல்லூர் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. 2–ம் ஆண்டு படித்து வருகிறார்.
இதற்கிடையே சாந்தியை திருவெண்ணைநல்லூரை சேர்ந்த டிராக்டர் டிரைவர் மணிகண்டன் (22) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. சாந்தியை நேரில் சந்தித்து மணிகண்டன் காதலை வெளிப்படுத்திய போது அதனை சாந்தி ஏற்கவில்லை. தொடர்ந்து இதுபோன்று சாந்தியை சந்தித்து தன்னை காதலிக்குமாறு மணிகண்டன் வற்புறுத்தி வந்தார். ஆனாலும் சாந்தி இதற்கு அசைந்து கொடுக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று மாலை கல்லூரி முடிந்து சாந்தி தனது கல்லூரி தோழி ஆஷா (19) என்பவருடன் மொபட்டில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். ஏமப்பேர் மாந்தோப்பு அருகே வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் தொடர்ந்து வந்த மணிகண்டன் திடீரென மொபட்டை வழிமறித்தார்.
அப்போது சாந்தியிடம் தனது காதலை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தினார். ஆனால் இதற்கு சாந்தி மறுத்து இனிமேல் இதுபோன்று தொந்தரவு செய்தால் பெற்றோர்களிடம் தெரிவிப்பேன் என்று கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து சாந்தியை சரமாரியாக குத்தினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தியின் தோழி ஆஷா அலறினார். உடனே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். இதனை பார்த்ததும் மணிகண்டன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த சாந்தி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் திருவெண்ணைநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating