கள்ளக்குறிச்சி: வாலிபர் கேலி செய்ததால் 10–ம் வகுப்பு மாணவி தற்கொலை!!
கள்ளக்குறிச்சி அருகே தென்கீரனூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகள் காயத்ரி (வயது 15). இவர் ஏமப்பேரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். காயத்ரி தினமும் சைக்கிளில் பள்ளிக்கு சென்று திரும்புவது வழக்கம்.
காயத்ரி பள்ளிக்கு செல்லும் போதும், திரும்பும் போதும் அதே பகுதியை சேர்ந்த பிரதாப் (24) என்பவர் தினமும் கேலி–கிண்டல் செய்து வந்தார். தொடர்ந்து இதுபோன்று கிண்டல் செய்து வந்ததால் இதுபற்றி காயத்ரி வெளியூரில் தங்கி கட்டிட வேலை செய்து வந்த தனது பெற்றோரிடம் முறையிட்டார். இதையடுத்து கடந்த 20–ந் தேதி காயத்ரியின் பெற்றோர் தென் கீரனூருக்கு வந்து பிரதாப்பை கண்டித்து விட்டு மீண்டும் கட்டிட வேலைக்கு வெளியூர் சென்று விட்டனர்.
இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து காயத்ரி சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது திடீரென காயத்ரியை பிரதாப் வழிமறித்து ஆபாச வார்த்தைகளால் உடல் அழகை வர்ணித்தார்.
இதனால் காயத்ரி அழுது கொண்டே வீடு திரும்பினார். பின்னர் இதுபற்றி தனது பெற்றோரிடம் காயத்ரி செல்போனில் தெரிவித்தார். இதையடுத்து காயத்ரியை அவரது பெற்றோர் சமாதானப்படுத்தி வீட்டுக்கு விரைந்து வருவதாக கூறினர்.
இதைத்தொடர்ந்து சின்ன துரையும் அவரது மனைவியும் வீட்டுக்கு விரைந்து வந்தனர். அப்போது வீட்டில் மின் விசிறி கொக்கியில் காயத்ரி சேலையால் தூக்கு போட்டு பிணமாக தொங்கினார்.
இதுகுறித்து அவர்கள் கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தனர். போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மாணிக்க ராஜா மற்றும் போலீசார் விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குபதிவு செய்து பிரதாப்பை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேலி–கிண்டல் செய்ததால் அவமானத்தில் மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தென்கீரனூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating