பழங்குடியின மாணவிகள் காப்பகத்தில் சிறுமிகளை வைத்து விபச்சாரம்: 5 பேர் கைது!!
ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், புட்டைய்யாகுடெம் கிராமத்தில் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவிகள் தங்கும் அரசு காப்பகம் ஒன்று இயங்கி வருகின்றது.
இந்த காப்பகத்தில் சிறுவயது மாணவிகளை வைத்து சிலர் விபச்சார தொழில் செய்து வருவதாக மாவட்ட கலெக்டருக்கு சமீபத்தில் ஒரு மொட்டைக் கடிதம் வந்தது. இதனையடுத்து, இதுபற்றி விரைவாக விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட்டுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
உடனடியாக புட்டைய்யாகுடெம் கிராமத்துக்கு விரைந்த போலீஸ் படையினர் நடத்திய விசாரணையில் அந்த காப்பகத்தின் சமையல்காரியாக பணியாற்றிவரும் சியாமளா என்ற பெண்ணின் துணையுடன் வெளிநபர்கள் 4 பேர் ஒன்றிணைந்து பள்ளி மாணவிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருவது தெரியவந்தது.
இதனையடுத்து, அந்த விடுதியில் தங்கியிருந்த பாதிக்கப்பட்ட மாணவிகளை மீட்டு, மருத்துவ பரிசோதனைக்காக ஏலூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார், சமையல்காரி சியாமளா உள்பட குற்றவாளிகள் ஐந்து பேரையும் கைது செய்துள்ளனர்.
மீட்கப்பட்ட மாணவிகள் அனைவரும் பதினான்கு வயதுக்கு குறைவானவர்கள் என்றும் ஏழாம் வகுப்பில் படித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Average Rating