சுசீந்திரம் பகுதியில் பேஸ்புக் காதலனுடன் இளம்பெண் தஞ்சம்!!
சுசீந்திரம் அருகே உள்ள தெங்கம்புதூர் கீழ தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மகள் முத்துக்குமாரி (வயது 24), பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து முடித்துள்ள முத்துக்குமாரி அழகிய மண்டபத்தில் உள்ள ஒரு பேன்சி கடையில் வேலை செய்து வந்தார்.
வீட்டில் இருந்து தினமும் காலை பஸ்சில் கடைக்கு சென்று விட்டு இரவு முத்துக்குமாரி வீடு திரும்புவது வழக்கம். கடந்த 15–ந்தேதி வழக்கம்போல காலையில் கடைக்கு வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற முத்துக்குமாரி இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
மகள் வீடு திரும்பாததால் பதறிப்போன அவரது பெற்றோர் கடைக்கு போன் செய்து முத்துக்குமாரி பற்றி விசாரித்தனர். ஆனால் முத்துக்குமாரி அன்று வேலைக்கு வரவில்லை என்று கடைக்காரர்கள் தெரிவித்து விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் முத்துக்குமாரியின் தோழிகளுக்கு போன் செய்து விசாரித்தனர். உறவினர்கள் வீடுகளில் தேடியபோதும், முத்துக்குமாரி பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதனால் சுசீந்திரம் போலீசில் முத்துக்குமாரியின் தாய் வீரமணி புகார் செய்தார். வேலைக்கு சென்ற தனது மகள் மாயமாகி விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தரும்படியும் கூறி இருந்தார்.
இதுபற்றி சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை முத்துக்குமாரி, தனது காதலன் சேலம் மாவட்டம் ஓமலூர் பூசாரிபட்டியைச் சேர்ந்த பிரபாகரன் (26) என்பவருடன் சுசீந்திரம் போலீசில் தஞ்சமடைந்தார். முத்துக்குமாரியிடம் போலீசார் விசாரித்தபோது, பிரபாகரனும், தானும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், தங்கள் இருவரையும் சேர்ந்து வாழ அனுமதிக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.
முத்துக்குமாரி பாலிடெக்னிக் படித்தபோது ஒரு போட்டியில் கலந்து கொள்வதற்காக சேலத்தில் உள்ள பாலிடெக்னிக்கு சென்றார். அப்போது பிரபாகரனும் அங்கு படித்து வந்தார். அவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
முத்துக்குமாரி ஊர் திரும்பியபிறகு அவரும் பிரபாகரனும் பேஸ்புக் மூலம் கடந்த 1½ வருடங்களாக தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர். இதன் பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபாகரன் வீட்டார் முத்துக்குமாரி வீட்டாரிடம் பெண் கேட்டுள்ளனர்.
ஆனால் முத்துக்குமாரி வீட்டில் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் முத்துக்குமாரி போன் செய்து காதலனை நாகர்கோவில் வரவழைத்துள்ளார். அதன் பிறகு காதலனுடன் சேலம் சென்று அங்கு ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.
போலீசார் தேடுவதை அறிந்து தற்போது போலீசில் சரண் அடைந்துள்ளனர். இந்த தகவல்களை போலீசார் விசாரணையில், காதல் ஜோடி தெரிவித்தது. இதை தொடர்ந்து இரு வீட்டாரின் பெற்றோரையும் வரவழைத்து போலீசார் சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Average Rating