நடந்து சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு!!
அம்பத்தூரில் நடந்து செல்லும் பெண்களிடம் தாலிசெயின் பறிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருமலை பிரியநகர் 6–வது தெரு சந்திப்பில் 35 வயது மதிக்கத்தக்க பெண், டியூசனுக்கு சென்றிருந்த தனது மகளை அழைத்து வர நடந்து சென்றபோது மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் அந்த பெண்ணின் தாலி செயினை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதில் 5 பவுன் தாலி செயின் பறிபோனது.
இந்த சம்பவம் நடந்த 2 நாட்களுக்குள் மீண்டும் வழிப்பறி சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–
அம்பத்தூர் மேற்கு பானுநகரைச் சேர்ந்தவர் ராணி (வயது55). பானுநகர் 10–வது அவென்யூவில் மாவு அரைக்க சென்றிருந்தார்.
மாவு அரைத்து முடித்ததும் காமராஜர் தெரு வழியாக வீட்டுக்கு நடந்து சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென ராணியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தாலி செயினை பறித்து சென்று விட்டனர்.
நகையை பறிகொடுத்த பெண் அம்பத்தூர் போலீசில் கண்ணீர் மல்க புகார் கொடுத்துள்ளார்.
அம்பத்தூரில் தாலி செயின் பறிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பானுநகர், ராஜீவ் நகர், திருமலை பிரியாநகரில் வாரத்துக்கு 2 செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
பானுநகர் 3–வது அவென்யூ சர்ச் அருகேயும், திருமலைபிரியா நகர் – ராஜீவ் நகர் சந்திப்பிலும், தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவம் அரங்கேறுவது அங்குள்ள மக்களை பீதியடைய செய்துள்ளது.
கொள்ளையர்கள் குறிப்பாக மதியம் மற்றும் மாலை 7 மணியளவில்தான் ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் சம்பவங்களில் மோட்டார்சைக்கிளில் வந்து பெண்களிடம் நகை பறிக்கின்றனர்.
ஆயுத படை போலீஸ் உதவியுடன் துப்பாக்கியுடன் ரோந்து பணியை தீவிரப்படுத்தினால்தான் வழிப்பறி சம்பவங்கள் பானுநகரில் குறையும் என்று பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர்.
Average Rating