கட்டாய திருமணத்திற்கு இளம்பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது!!
திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளபட்டியை சேர்ந்தவர் கோபால் மகள் விமலா(வயது23). எம்.பி.ஏ பட்டதாரியான இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தேனி அருகே உள்ள சக்கரைப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் கோவையில் உள்ள மற்றொரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது அவர்களிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. கார்த்திக், விமலாவை ஒருதலையாக காதலித்துள்ளார்.
இதையடுத்து அவர் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு விமலாவை வற்புறுத்தினார். இதனை விமலா ஏற்கவில்லை.
இதையடுத்து கார்த்திக் ‘நானும் விமாலாவும் காதலித்து வந்தோம், தற்போது விமலா என்னை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். எனவே எங்கள் இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும்‘ என்று மதுரை ஐ–கோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையில் ஆஜரான விமலா தான் யாரையும் காதலிக்கவில்லை.
பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையைதான் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதிபடக்கூறினார். இதையடுத்து நீதிபதி, கார்த்திக்குக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.
விமலாவை மறக்க முடியாமல் தவித்த கார்த்திக் அவரை எப்படியும் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார். இதற்காக அவர் விமலாவுடன் திருமணம் செய்து கொண்டதுபோல் திருமண வாழ்த்து போஸ்டர் அச்சடித்தார்.
இதில் கார்த்திக், விமலா படங்களும் திருமண வாழ்த்துக்கள், மணமகன் கார்த்திக், மணமகள் விமலா என்று அச்சிடப்பட்டு இருந்தது. அவற்றில் ஒரு பிரதியை விமலாவுக்கு தபாலில் அனுப்பி வைத்தார். அந்த போஸ்டரின் பின்பகுதியில் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதனை மீறி போலீசில் புகார் செய்தால் இந்த போஸ்டரை ஊர் முழுவதும் ஒட்டுவேன் என்று எழுதியிருந்தார்.
இந்த திருமண வாழ்த்து போஸ்டரை பார்த்ததும் விமலாவும், அவரது பெற்றோரும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனிடம் புகார் செய்தனர். அவரது உத்தரவின்பேரில் சின்னாளபட்டி சப்–இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குபதிவு செய்து அவர்கள் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தினார்.
விமலா தான் யாரையும் காதலிக்கவில்லை, கார்த்திக் ஏமாற்றுகிறார் என்னுடைய படத்தை டிஜிட்டல் முறையில் அவரது படத்துடன் இணைத்து அச்சடித்துள்ளார் என்று கூறினார். இதையடுத்து போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர்.
Average Rating