குன்னத்தூரில் கல்லூரி மாணவர் தற்கொலை: போலீசார் விசாரணை!!
குன்னத்தூரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 20). இவர் ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. இறுதியாண்டு படித்து வந்தார். பகுதி நேரமாக குன்னத்தூர் பஸ் நிலையத்தில் உள்ள மெடிக்கல் ஸ்டோரில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றார். வகுப்பு முடிந்ததும் மாணவர்கள் வெளியே சென்றனர்.
தனியாக இருந்த கார்த்திகேயன் வகுப்பறை கரும்பலகை அருகே சென்றார். அதிலிருந்த வருகை பதிவில் 56 என்று இருந்த இடத்தில் 55 என மாற்றினார். இனிமேல் 55 தான் இருக்கும் என்றும் எழுதி வைத்தார். பின்னர் வேலை செய்யும் மெடிக்கல் ஸ்டோருக்கு வந்தார். சிறிது நேரம் அங்கிருந்துவிட்டு டீ சாப்பிட்டு விட்டு வருவதாக வீட்டுக்கு வந்தார். வீட்டில் யாரும் இல்லை. சிறிது நேரம் அங்கிருந்த கார்த்திகேயன் எனக்கு வாழப்பிடிக்கவில்லை. என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனது உடலை தேட வேண்டாம் என்று தனது தாய்க்கு கடிதம் எழுதி வைத்தார்.
இரவு 8.30 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினார். வெளியே சென்ற கார்த்திகேயனின் பெற்றோர் வீட்டில் மகன் எழுதி வைத்த கடிதத்தை படித்து அதிர்ச்சியடைந்தனர். அக்கம் பக்கம் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். எங்கும் கார்த்திகேயனை கண்டு பிடிக்க முடியவில்லை. உடனே குன்னத்தூர் போலீசில் புகார் செய்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் கார்த்திகேயனை தீவிரமாக தேடினர்.
இந்நிலையில் பெருந்துறை பெத்தம்பாளையம் பி.ஏ.பி. வாய்க்காலில் வாலிபர் பிணம் அழுகிய நிலையில் கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்த குன்னத்தூர் போலீசுக்கும் தகவல் கிடைத்தது. அவர்கள் கார்த்திகேயனின் பெற்றோரை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்துக்கு சென்றனர். பிணமாக கிடப்பது தங்கள் மகன்தான் என்று கார்த்திகேயனின் பெற்றோர் உறுதிசெய்தனர். பிணம் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த குன்னத்தூர் போலீசார் கார்த்திகேயன் குடும்ப பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது காதல் தோல்வியால் தற்கொலை செய்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating