நெரிசலில் சிக்கி ஆறு குழந்தைகள் இறந்ததைத் தொடர்ந்து சீனாவில் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்!!
சீனாவின் தென்மேற்கில் உள்ள யுன்னான் மாகாணத்தின் குன்மிங் நகரத்தில் மிங்டோங் ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்தப் பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சுவற்றின் அருகில் சாத்தி வைக்கப்பட்டிருந்த உடற்பயிற்சி வகுப்பில் பயன்படுத்தப்படும் இரண்டு மீட்டர் நீளமுள்ள பருத்தி விரிப்பு ஒன்று சரிந்து படிக்கட்டில் வந்துகொண்டிருந்த சிறு குழந்தைகளை மூடியுள்ளது. அதனை எதிர்பார்க்காத மற்ற குழந்தைகள் அவசரமாக அதன் மீது ஏறி ஓட அடியில் சிக்கிகொண்ட குழந்தைகளில் ஆறு பேர் பலியாகி உள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் 26 குழந்தைகள் காயமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஆறு, ஏழு வயதுக்குட்பட்ட ஒன்று, இரண்டு வகுப்புகளில் படித்துவந்த குழந்தைகள் ஆவர்.
இதனைத் தொடர்ந்து ஏராளமான பெற்றோர்கள் பள்ளிக்கு அருகில் இன்று ஒரு ஆர்ப்பாட்ட பேரணியினை நடத்தினர். வருத்தத்துடனும், அழுகையுடனும் தங்கள் குழந்தையின் புகைப்படத்தைக் கையில் வைத்திருந்த அவர்கள் ‘கொலையாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்’ என்ற பேனர்களை ஏந்தி சென்றனர். ஆனால் இவர்களை கலகத்தை அடக்கும் காவல்துறையினர் விலக்க முற்பட்டபோது அங்கு சிறு சச்சரவுகள் ஏற்பட்டன. பல பெற்றோர்கள் இவர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டதை புகைப்பட காட்சிகள் வெளிப்படுத்தின.
பள்ளி பாதுகாப்பு என்பது சீனாவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இந்த விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளியின் நிர்வாகப் பொறுப்பில் இருந்த ஏழு பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அரசு செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.கடந்த ஆண்டு சீனாவின் மத்தியில் உள்ள ஹுபெய் மாகாணத்தின் நடந்த நெருக்கடி சம்பவத்தில் நான்கு குழந்தைகள் பலியானதும் இங்கு குறிப்பிடப்பட்டது.
Average Rating