3 வயது குழந்தை இறக்க – 5 பேருக்கு மறுபிறவி!!
கிழக்கு சீனாவின் ஜியாங்ஸி மாகாணத் தலைநகரான நான்சங் நகரை சேர்ந்த 3 வயது சிறுமியான லியு ஜிங்யாவோ, கடந்த சில மாதங்களாக தளர்வாகவும், சோர்வாகவும் காணப்பட்டாள்.
சுறுசுறுப்பாக துள்ளித் திரிந்து விளையாடிய அன்பு மகள் சோர்ந்துப் போய் கிடப்பதைக் கண்டு பதறிப்போன பெற்றோர், நகரில் உள்ள மிகப்பெரிய டாக்டர்களை எல்லாம் தேடிச் சென்றபோது, அனைவரும் ஒரே பதிலையே கூறினர்.
ஒருவகை மூளைப்புற்று நோயால் பாதிக்கப்படுள்ள லியு ஜிங்யாவோ, இன்னும் சில வாரங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும். நோய் முற்றியுள்ள நிலையில் அவளுக்கு சிகிச்சை அளித்து பிழைக்க வைக்க சாத்தியம் இல்லை என்று டாக்டர்கள் கையை விரித்து விட்டனர்.
இதற்கிடையில், ஜியாங்ஸி மாகாண அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த லியு ஜிங்யாவோ-வின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. தலைப்பகுதி மெல்ல,மெல்ல வீங்கத் தொடங்கியது. பேசும் திறனும் குறைய ஆரம்பித்தது.
அன்பு மகளின் உயிர் நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவளது நினைவுகள் நம்மோடு மட்டுமின்றி, வேறு சிலரோடும் நிலைத்து வாழ வேண்டும் என்று முடிவெடுத்த லியு ஜிங்யாவோ-வின் பெற்றோர், பயன்படத்தக்க அவளது உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதாக டாக்டர்களிடம் தெரிவித்தனர்.
அனைவரும் பயந்துக் கொண்டிருந்த அந்த துயர நாளும் வந்து சேர்ந்தது. கடந்த 23-ம் திகதி தந்தை லியு க்ஸியாவ்பாவ்-வின் மடியில் லியு ஜிங்யாவோ-வின் உயிர் பிரிந்தது. அவளது உடலின் உறுப்புகளை டாகடர்கள் அறுவடை செய்தனர்.
மிகச் சிறிய வயது என்பதால் அவளது இரு சிறுநீரகங்களில் ஒன்று மட்டுமே பூரண நிலையில் வளர்ச்சி அடைந்திருந்தது. அந்த சிறுநீரகம் ஒரு நபருக்கு பொருத்தபட்டது. இரு கண் விழிகளும் தலா ஒருவருக்கும், இதயம் மற்றும் ஈரல் தலா ஒருவருக்கும் பொருத்தப்பட்டு அவர்கள் ஐந்து பேரும் நலமாக உடல்நுலை தேறி வருவதாக ஜியாங்ஸி மாகாண அரசு ஆஸ்பத்திரியின் டாக்டர்களில் ஒருவரான ழாங் மிங் தெரிவித்துள்ளார்.
’இந்த உலகின் மிகவும் அழகான குட்டி இளவரசியான எனது மகள் எங்களை விட்டு மறைந்தாலும், ஐந்து பேரின் வாழ்க்கைக்கு ஒளியூட்டி விட்டுச் சென்றிருக்கிறாள்’ என்று லியு ஜிங்யாவோ-வின் புகைப்படத்தை அணைத்தபடி அவரது தந்தை கண்ணீர் கலந்த பெருமிதத்துடன் கூறுகிறார்.
Average Rating