கிளிமஞ்சாரோ மலையில் 5730 மீற்றர் உயரத்தில் கிரிக்கெட் விளையாடி புதிய சாதனை!!
ஆபிரிக்காவின் மிக உயரமான மலைச் சிகரமான கிளிமஞ்சாரோ மலையில், சர்வதேச கிரிக்கெட் வீரர்கள், வீரராங்கனைகள் அடங்கிய குழுவொன்று கிரிக்கெட் விளையாடி புதிய உலக சாதனை படைத்துள்ளது.
உலகில் மிக அதிக உயரமான இடத்தில் கிரிக்கெட் விளையாடி சாதனை படைக்கும் நோக்குடன் இக்கிரிக்கெட் விளையாட்டு இடம்பெற்றது.
தென் ஆபிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மெக்காயா என்டினி, இங்கிலாந்தின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அஷ்லி கைல்ஸ், இங்கிலாந்து மகளிர் அணியின் உபதலைவி ஹீதர் நைட் ஆகியோரும் இந்த இருபது20 போட்டியில் பங்குபற்றினர்.
தான்ஸானியா நாட்டிலுள்ள கிளிமஞ்சாரோ மலை 19431 அடி (5895 மீற்றர்) உயரமானதாகும். இம்மலையில் மேற்படி குழுவினர் 18799 அடி (5730 மீற்றர்) உயரத்தில் கிரிக்கெட் விளையாடினர்.
இதற்குமுன் 1999 ஆம் ஆண்டு நேபாளத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் 5165 மீற்றர் உயரத்தில் கிரிக்கெட் விளையாடப்பட்டமையே மிக அதிகமான உயரத்தில் கிரிக்கெட் விளையாடப்பட்ட நிகழ்வாக இருந்தது.
இப்போட்டியில் அஸ்லி கைல்ஸ் தலைமையிலான ரைனோஸ் அணியை ஹீதர் நைட் தலைமையிலான கொரில்லாஸ் அணி வென்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொரில்லாஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 80 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுபெடுத்தாடிய ரைனோஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 69 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
Average Rating