தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக் கோரி உண்ணாவிரதம்!!
தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யக் கோரி யாழ். நல்லூர் கோவிலுக்கு அருகாமையில் எதிர்வரும் 03 ஆம் திகதி உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் சுதர்சிங் விஜயகாந் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
´கடந்த மாதம் 20-08-2014 அன்று யாழ். செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடாத்தி ஜனாதிபதிக்கு யாழ். அரச அதிபர் ஊடாக மகஜர் ஒன்றினை அனுப்பி வைத்தோம்.
ஆனால் இந்த நிமிடம் வரை அதற்கான பதில் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. இந்நிலையில் 12, 13 திகதிகளில் யாழ்ப்பாணம் வருகை தரவிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் எமது எதிர்ப்பைக் காட்டும் வகையிலும் இப் போராட்டத்தை நாம் முன்னெடுக்கவுள்ளோம்.
சிறைகளில் வாடும் எமது சகோதர, சகோதரிகளின் விடுதலையை வலியுறுத்தி எதிர்வரும் வெள்ளிக்கிழமை 3ஆம் திகதி 10 மணிக்கு எமது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து ஞாயிற்றுக்கிழமை 5ஆம் திகதி 5 மணிவரை இரவு பகலாக மூன்று நாட்கள் நிகழ்த்த உள்ளோம்.
தமிழ் அரசியல் கட்சிகளும் ஊடகங்களும், அனைத்து தமிழ் பேசும் மக்களும் ஆதரவு தந்து இவ்வுண்ணாவிரதப் போராட்டத்திற்கு வலுச்சேர்ப்பீர்கள் என மிகவும் பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன்.´ – என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Average Rating