சிங்கம்புணரி அருகே மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி சாவு!!
சிங்கம்புணரி அருகே உள்ள கிருங்காக்கோட்டை அல்லிக்குளத்தை சேர்ந்த முருகேசன் மகள் பாண்டீஸ்வரி (வயது15).இவர் கிருங்காக்கோட்டை அரசு மேல் நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார்.
பள்ளிக்கு சென்ற பாண்டீஸ்வரிக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் ரத்த வாந்தி எடுத்ததை தொடர்ந்து சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டீஸ்வரி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து கிருங்காக்கோட்டையில் பிரான் மலை ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் செந்தில் குமார் தலைமையில் 40–க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சுகாதார பணியில் ஈடுபட்டனர்.
மேலும் இக்கிராமத்தில் 100–க்கும் மேற்பட்டோர் ‘மர்ம’ காய்ச்சல் தாக்கி தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், கடந்த ஒருமாதமாக ‘மர்ம’ காய்ச்சலால் கிராம மக்கள் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளோம். மாவட்ட நிர்வாகம் ‘மர்ம’ காய்ச்சலை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டனர்.
Average Rating