சாமி கும்பிட சென்ற மாணவனை திருடன் என நினைத்து அடித்து உதைத்த போலீஸ்காரர்!!
திருச்சூரை அடுத்த வியூர் பகுதியை சேர்ந்தவர் சஜிவ். இவரது மனைவி சோபியா. இவர்களின் மகன் நிகில்.
நிகில் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் மாலையில் திருச்சூரில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட செல்வார். சரஸ்வதி பூஜையையொட்டி கோவிலில் கொலு அமைக்கப்பட்டு பூஜைகள் நடந்து வந்தது. நேற்று முன்தினம் தனது பள்ளி புத்தகங்களை பூஜையில் வைப்பதற்காக கோவிலுக்கு எடுத்துச் சென்றார்.
அப்போது கோவிலுக்கு வந்த ஒரு பெண்ணின் கைப்பையை காணவில்லை என அங்கிருந்தவர்கள் தேடிக் கொண்டிருந்தனர். திருச்சூர் கிழக்கு போலீஸ் நிலைய கார் டிரைவர் அரிதாஸ் என்பவரும் பெண்ணின் கைப்பையை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அவருக்கு மாணவன் நிகில் மீது சந்தேகம் ஏற்பட்டது. மாணவனை பிடித்து திருடிய கைப்பையை கேட்டு அடித்தார். வலிதாங்காமல் மாணவன் அழுத பின்பும் அவர் அடிப்பதை நிறுத்த வில்லை.
இதனை கோவிலில் இருந்தவர்கள் தட்டி கேட்ட பின்பு மாணவன் விடுவிக்கப்பட்டான். மறுநாள் காலையில் கைப்பையை தொலைத்த பெண், அந்த பை தனது வீட்டில் தான் இருந்தது என்று போலீசாரிடம் தெரிவித்தார்.
அதன் பிறகு தான் மாணவன் நிகிலை திருடன் என தவறாக நினைத்து போலீஸ்காரர் அரிதாஸ் தாக்கியது தெரிய வந்தது. இது பற்றி நிகிலின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அவர்கள் புகாரை ஏற்க மறுத்து அலைகழித்தனர்.
இந்த தகவல் வெளியானதும் குழந்தைகள் நல அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். அவர்கள் போலீஸ் நிலையம் முன்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். இதையடுத்து மாணவன் நிகிலை தாக்கியதாக போலீஸ்காரர் அரிதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே போலீஸ்காரர் அரிதாஸ், மாணவன் நிகிலின் பெற்றோரை சந்தித்து புகாரை வாபஸ் பெறும் படியும், அதற்காக கணிசமான பணம் தருவதாகவும் கூறியதாக தெரிகிறது. இந்த சம்பவத்தையும் குழந்தைகள் நல அமைப்பினர் கண்டித்து உள்ளனர். அவர்கள் போலீஸ்காரர் அரிதாஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Average Rating