காதல் திருமணம் செய்த மாணவியிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை: 2 பேர் கைது!!
அருப்புக்கோட்டை அருகே உள்ள கல்லுப்பட்டியை சேர்ந்தவர் சின்னம்மாள் (வயது16). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்த இருளன் மகன் வீரய்யா என்ற வீரணன் (22) லாரி டிரைவர். இவருக்கும் சின்னம்மாளுக்கும் கடந்த ஓராண்டாக பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் ஊர் பெரியவர்களுக்கு தெரியவந்ததும் அவர்கள் இருவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் செய்து வைத்துவிட்டனர்.
இந்த நிலையில் தற்போது சின்னம்மாளின் மீது வீரய்யா சந்தேகம் கொண்டுள்ளார். மேலும் 10 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் வரதட்சணை வாங்கி வரவேண்டும் என சித்ரவதை செய்தாராம்.
இது குறித்து அருப்புக்கோட்டை மகளிர் போலீசில் சின்னம்மாள் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்ததாக வீரய்யா, அவரது தந்தை இருளன் மற்றும் அந்த ஊரை சேர்ந்த வேடம்மாள், கருப்பையா, காமராஜ், கோபி, பாலு, இருளன், முத்து, மீனாட்சி, கருப்பையா ஆகியோர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.
இதில் சின்னம்மாளின் கணவர் வீரய்யா, அவரது தந்தை இருளன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Average Rating