ஜெயலலிதாவை விடுதலை செய்ய ஜனாதிபதி தலையிட வேண்டும்: மதுரை ஆதீனம் பேச்சு!!
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி மதுரையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் குடும்பத்தினர் கலந்து கொண்ட உண்ணாவிரத போராட்டத்தில் ஜெயநீதி ராஜூ, மகேஸ்வரி செல்லப்பா, தாமரை செல்வி உதயகுமார், வளர்மதி ஜெபராஜ், தீபா கோபாலகிருஷ்ணன், பாக்கியலெட்சுமி போஸ், ஜெயலட்சுமி சிவரஞ்சனி உள்ளிட்ட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரத போராட்டத்தை மதுரை ஆதீனம், சசிகலா புஷ்பா எம்.பி. ஆகியோர் முடித்து வைத்தனர். அப்போது மதுரை ஆதீனம் பேசியதாவது:–
தமிழக மக்களுக்காக இரவை பகலாக்கி உழைப்பவர் புரட்சித்தலைவி அம்மா. அவருக்கு சோதனை என்பது புதிதல்ல. அவர் எத்தனையோ சோதனைகளை சந்தித்து அதனை சாதனையாக மாற்றி வெற்றி பெற்றுள்ளார்.
புரட்சித்தலைவியை இரண்டாவது மங்கையர் கரசியாக பார்க்கிறோம். நமது அம்மா குற்றமற்றவர். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இதற்காக ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திரமோடி உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.
சட்டம் தன் கடமையை செய்யும் என்று ஒதுங்கி இருக்க கூடாது. அம்மா விடுதலை செய்யப்பட்டால்தான் தமிழகத்தில் அமைதியான சூழ்நிலை ஏற்படும்.
எல்லா தரப்பு மக்களும் தற்போது மிகுந்த கவலையில் உள்ளனர். ஏனென்றால் அனைத்து தரப்பு மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி தமிழகத்தை வழி நடத்தி வருகிறார் அம்மா. தமிழகத்தில் யாருக்கும் எந்த குறையும் இல்லை என்ற நிலையை உருவாக்கினார். எனவே தர்மம், நீதி, நியாயம் அனைத்தும் சட்டத்துக்குள் வரவேண்டும்.
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது என்பார்கள். நரியே அஞ்சாதபோது புரட்சித்தலைவி அம்மா சிங்கம் போன்றவர். அவர் எதற்கும் அஞ்ச மாட்டார். எனவே அவர் விரைவில் விடுதலை ஆகி தமிழக மக்களின் முதல்– அமைச்சராக வருவார். எனவே அறவழியில் நடத்தப்படும் நமது போராட்டம் நீதித்துறைக்கு எதிரானது அல்ல. மக்களின் மனநிலையை உணர்த்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இந்த போராட்டங்கள் மற்றும் இறை வேண்டுதல்கள் அம்மாவுக்கு விரைவில் நிரபராதி என்ற தீர்ப்பை பெற்று தரும்.
இவ்வாறு மதுரை ஆதீனம் பேசினார்.
Average Rating