புதரில் வீசப்பட்ட குழந்தையை வளர்க்க பெண்கள் ஆர்வம்!!
ஈரோடு பி.பி. அக்ரஹாரம் பிராமண அக்ரஹாரம் வீதியில் உள்ள புதர் மறைவில் பச்சிளம் பெண் குழந்தை வீசப்பட்டது. அதிகாலையில் வீசப்பட்ட அந்த குழந்தை பனிப்பொழிவின் குளிர் தாங்க முடியாமல் கதறி அழுதது.
இந்த அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தனர். அங்கு அழகிய பெண் குழந்தை துணியால் சுற்றப்பட்டு கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர்.
தொப்புள் கொடி கூட காயாத நிலையில் குழந்தையை வீசிச்சென்ற கல்நெஞ்சம் படைத்த தாயை அவர்கள் திட்டி தீர்த்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த கருங்கல்பாளையம் போலீசார் அந்த குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நர்சுகள் அந்த குழந்தையை பராமரித்து வருகின்றனர். நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் அந்த குழந்தையை சமூக நலத்துறை மூலம் தொட்டில் மையத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குழந்தை வீசப்பட்டு நான்கு தினங்கள் ஆகியும் அந்த குழந்தைக்கு சொந்தம் கொண்டாடி யாரும் வரவில்லை.
இதற்கிடையே அந்த குழந்தையை தத்தெடுக்க பி.பி. அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த 3 பெண்கள் போலீசாரை தொடர்பு கொண்டனர். இதில் ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகிய நீண்டகாலம் ஆகியும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை.
இவர் சம்பவத்தன்று, புதரில் தவித்த குழந்தையை உச்சி முகர்ந்து கையில் தூக்கி வைத்துள்ளார். அப்போது போலீசாரும் வந்தனர். போலீசாரிடம் அவர், ‘‘எனக்கு குழந்தை இல்லை. இந்த குழந்தையை நான் வளர்த்து கொள்கிறேன்’’ என கேட்டார். இதையடுத்து அருகில் நின்ற வேறு 2 பெண்களும் குழந்தையை கேட்டனர்.
ஆனால் சட்டவிதிகளுக்கு உட்பட்டு தான் குழந்தையை தத்தெடுக்க முடியும். இப்போது நீங்கள் கேட்டவுடன் குழந்தையை தர முடியாது என போலீசார் கூறி விட்டனர். இதனால் அப்பெண்கள் ஏமாற்றம் அடைந்தனர். இப்போது முறைப்படி சமூக நலத்துறை மூலம் அவர்கள் அந்த குழந்தையை தத்தெடுக்க முயற்சித்து வருகிறார்கள்.
Average Rating