ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1சி செயற்கைகோள் ஏவுதல் ஒரு வாரத்திற்கு தள்ளி வைப்பு!
அமெரிக்காவின் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் போன்று இந்தியாவுக்கான சொந்தமாக வழிக்காட்டும் தொழில் நுட்பத்தை ஏற்படுத்த ஏதுவாக இஸ்ரோ செயற்கைகோள்களை அனுப்பி வருகிறது. 7 செயற்கை கோள்களை அனுப்பும் இத்திட்டத்தில் மூன்றாவது செயற்கைக்கோளாக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1 சி செயற்கைகோளை அக்டோபர் 10-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டது.
இதற்கான 67 மணி நேர கவுன்ட் டவுன் நாளை காலை தொடங்க உள்ள நிலையில், இந்த செயற்கைக் கோள் திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தனது பேஸ்புக் தளத்தில் தெரிவித்துள்ளது.
தொலைத்தொடர்பு அமைப்பில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் செயற்கைக் கோளை செலுத்துவது ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக இஸ்ரோ கூறியுள்ளது.
இந்த திட்டத்தில் கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் செயற்கை கோளும், இந்த ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி இரண்டாவது செயற்கை கோளும் ஏவப்பட்டன. ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டுமெனில், மொத்தம் உள்ள 7 செயற்கை கோள்களில் குறைந்தது 4 செயற்கைக் கோள்களை ஏவ வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating