தமிழகத்தில் அரசியலுக்கு ரஜினி, கமல் வர வேண்டும்!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அரசியலுக்கு இழுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் பாரதிய ஜனதா, அடுத்த கட்டமாக தமிழக பாரதிய ஜனதா தலைவரை அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது.
மேலிடத்தின் வழிகாட்டுதலின் பேரில் சமீபத்தில் ரஜினி வீட்டில் நடந்த நவராத்திரி கொலு விழாவில் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். அவர் ரஜினி வீட்டுக்கு சென்ற நேரத்தில் ரஜினி இல்லாததால் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் பேசி விட்டு வந்து இருக்கிறார்.
இதுபற்றி தமிழிசையிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: ரஜினி வீட்டில் நடந்த கொலு நிகழ்ச்சிக்குத்தான் சென்றிருந்தேன். மோடி குறித்து நான் எழுதிய புத்தகத்தை லதாரஜினிக்கு வழங்கினேன். இந்தியாவை தூய்மைப்படுத்தும் மோடியின் திட்டத்தை அவர் வெகுவாக பாராட்டினார்.
ரஜினி வந்ததும் மீண்டும் வந்து சந்திப்பதாக கூறி இருக்கிறேன். ரஜினிக்கும் மோடிக்கும் நல்ல உறவு இருக்கிறது. பா.ஜனதாவின் திட்டங்களை அவர் பாராட்டி இருக்கிறார்.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நதிகள் இணைப்பு திட்டத்தை அறிவித்ததும் பாராட்டு தெரிவித்தார்.
ரஜினி, கமல் போன்றோர் சமூக அக்கறையோடு செயல்படுபவர்கள். அசாதாரண சூழ்நிலைகள் ஏற்படும்போது ‘வாய்ஸ்’ கொடுப்பவர்கள்.
தற்போது தமிழகத்தில் ஒரு அசாதாரணமான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று ஜெயிலில் இருக்கிறார். மற்ற கட்சிகள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது.
தமிழகத்தில் மாற்று அரசியல் வரவேண்டும். மாற்றம் ஏற்பட வேண்டும். எனவே இந்த நேரத்தில் மாற்றத்தை உருவாக்க ரஜினி, கமல் போன்றவர்கள் முன் வர வேண்டும். ஒதுங்கி இருக்க கூடாது.
ரஜினியை சந்திக்கும் போது பாரதீய ஜனதாவை ஆதரிக்கும்படி நிச்சயமாக வலியுறுத்துவேன். இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating