சமூக ஊடகங்களின் உதவியால் டெல்லியில் கடத்தப்பட்ட 3 வயது சிறுமி மீட்பு!!
மத்திய டெல்லியைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 3 வயது மகள் ஜான்வி கடந்த 28-ந் தேதி இந்தியா கேட் பகுதியில் சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென மாயமானாள். இதனால் அதிர்ச்சியடைந்த அவளது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.
இது குறித்து போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடும் முயற்சியில் இறங்கினர். அதே நேரம் சிறுமியின் தந்தை டுவிட்டர், முக புத்தகம், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் மகளின் புகைப்படத்தை வெளியிட்டு குழந்தை கிடைத்தால் தகவல் தெரிவிக்குமாறு கூறி தனது போன் நம்பர்களையும் வெளியிட்டார்.
ஒருவாரத்திற்கு பின்பு இதற்கு நல்ல பலன் கிடைத்தது. நேற்று ஜானக்புரி மார்க்கெட் பகுதியில் ஜான்வியை பார்த்த ஒருவர் இது பற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் விரைந்து சென்று சிறுமி ஜான்வியை மீட்டனர். அப்போது, அவள் தலை முடி மழிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டாள். அவளது கழுத்தில் பதாகை ஒன்றும் இருந்தது. சிறுமியை அடையாளம் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக அவளைக் கடத்தியவர்கள் இதுபோல் செய்துள்ளனர். பின்னர், அந்த குழந்தை அவளுடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டாள். இது பற்றி போலீசார் கூறுகையில், குழந்தைகளை கடத்துவோர் தங்களுக்குள் கூட்டணி அமைத்து சிறுமி ஜான்வியை கடத்தியிருப்பது தெரிய வந்துள்ளது என்று தெரிவித்தனர்.
Average Rating