மனைவியை கொன்று கணவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை!!
திருவள்ளூரை அடுத்த மேல்நல்லாத்தூரை சேர்ந்தவர் கமலக்கண்ணன். திருநின்றவூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி பூங்குழலி (35). மணவாளநகர் சிறுதொண்டைமான் தெருவில் பியூட்டி பார்லர் நடத்தி வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இன்று காலை வழக்கம் போல் பூங்குழலி பியூட்டி பார்லருக்கு சென்றார். மதியம் 12.30 மணியளவில் வாடிக்கையாளர் ஒருவர் அங்கு சென்ற போது தரையில் ரத்த வெள்ளத்தில் பூங்குழலி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் மணவாள நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
திருவள்ளூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது பியூட்டி பார்லரில் இருந்து மோப்பம் பிடித்தபடி மெயின் ரோடு வரை ஓடி நின்றது.
இதற்கிடையே திருவள்ளூர்–ஏகாட்டூர் ரெயில் நிலையத்துக்கு இடையே உள்ள தண்டவாளத்தில் வாலிபர் பிணம் கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்த போது அது கொலையுண்ட பூங்குழலியின் கணவர் கமலக்கண்ணன் என்பது தெரிந்தது.
உடல் கிடந்த இடம் அருகே ரெயில்வே மேம்பாலம் உள்ளது. அதில் இருந்து ரெயில் வரும் நேரத்தில் கமலக்கண்ணன் கீழே குதித்து தற்கொலை செய்து உள்ளதாக தெரிகிறது.
பூங்குழலிக்கும், கமலக்கண்ணணுக்கும் இடையே கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. எனவே பூங்குழலி அம்பத்தூரில் உள்ள பெற்றோர் வீட்டில் இருந்து பியூட்டி பார்லருக்கு கடந்த சில நாட்களாக வந்துள்ளார்.
எனவே குடும்ப தகராறில் கமலக்கண்ணன் மனைவியை கழுத்தை அறுத்து கொன்று, தானும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது.
தாய்–தந்தையை இழந்து அவர்களது 2 மகன்களும் அனாதையாக உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating