வேலை வாங்கி தருவதாக கூறி பெண்களிடம் பணம் மோசடி: தனியார் நிறுவன அதிபர் கைது!!
கோயம்பேடு ஜெய்நகர் 18–வது தெருவில் ‘இன்போ டெக்’ என்ற பெயரில் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. வர்க்கீஸ் ராஜா என்பவர் இதனை நடத்தி வருகிறார்.
இவர் பெண்களுக்கு வேலை வாய்ப்பு இருப்பதாக விளம்பரம் செய்தார். அதோடு கவர்ச்சிகரமான ஊக்கத் தொகைகளையும் அறிவித்தார்.
இதனை நம்பி ஏராளமான பெண்கள் விண்ணப்பித்தனர். அவர்களிடம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை வசூல் செய்தார்.
சில பெண்களுக்கு இணைய தளம் மூலம் ‘கேன்வாஸ்’ செய்யும் பொறுப்பை வழங்கினார். அதற்காக தனி ஊதியம் வழங்குவதாக கூறினார். சிறப்பாக பணிபுரியும் பெண்களுக்கு பிரபல கம்பெனிகளில் வேலை வாங்கி தருவதாக கூறினாராம்.
இப்படி சேர்க்கப்பட்ட பெண்களுக்கு அவர் 3 மாதமாக சம்பளம் வழங்கவில்லை.
இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் கோயம்பேடு பஸ் நிலைய போலீசில் புகார் செய்தனர்.
உதவி கமிஷனர் மோகன் ராஜ் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் அரிக்குமார் வழக்குப்பதிவு செய்து வர்க்கீஸ் ராஜாவிடம் விசாரணை நடத்தினார். அவர் ரூ.2 லட்சத்து 36 ஆயிரம் வரை வசூல் செய்தது தெரிய வந்துள்ளது. அவரை போலீசார் கைது செய்தனர்.
Average Rating