சென்னையில் மெட்ராஸ்–ஐ பரவுகிறது!!
சென்னையில் தற்போது ‘மெட்ராஸ்–ஐ’ என்று சொல்லப்படும் கண் நோய் வேகமாக பரவி வருகிறது. தினமும் 10 முதல் 15 பேர் வரை இந்த நோயினால் பாதிக்கப்பட்டு டாக்டர்களிடம் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இப்போது இந்த எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
‘மெட்ராஸ்–ஐ’ கோடை காலத்தில் மட்டுமல்லாமல், குளிர் காலத்திலும் வரக்கூடியது. தற்போது கடுமையான வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் சென்னையில் ‘மெட்ராஸ்–ஐ’ பரவுவதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்நோய் பாதித்தவர்களுக்கு கண்கள் சிவப்பாக இருக்கும். கண்ணில் இருந்து நீர் வடியும். உருத்தல் உண்டாகும். காலையில் விழிக்கும் போது கண்களை திறக்க கடினமாக இருக்கும். கண்கள் ஒட்டி காணப்படும் போன்றவை ‘மெட்ராஸ்–ஐ’ன் அறிகுறிகளாகும்.
இது குறித்து டாக்டர்கள் கூறும்போது, ‘‘சென்னையில், ‘மெட்ராஜ்–ஐ’ பரவி வருகிறது. கண் நோய் பாதித்தவர்களின் படுக்கை, துண்டு போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்த கூடாது. கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குறைந்தது ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை இது இருக்கும்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இது பாதிக்கக்கூடியது. சுய மருத்துவம் செய்யாமல் அருகில் உள்ள கண் மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை பெற வேண்டும்’’ என்றனர்.
Average Rating