ஹூட் ஹூட் புயலால் இலங்கைக்கு என்ன பாதிப்பு ஏற்படலாம்?
ஹூட் ஹூட் புயலின் தாக்கம் காரணமாக நாட்டைச் சூழவுள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி அந்தமானில் புயல் சின்னமாக மையம் கொண்டுள்ளது. கடலோர ஆந்திராவை நோக்கி இந்தப் புயல் சின்னம் நகர்ந்து வருவதாக கூறப்படுகின்றது.
இதனால் இலங்கையைச் சூழவுள்ள கடற்பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் அடிக்கடி மழை பெய்யலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதன்படி மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை அதி தீவிர புயலான ஹுட் ஹுட் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினம், ஒடிஸாவின் கோபல்பூர் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தமிழக செய்திகள் குறிப்பிடுகின்றன.
புயல் கரையைக் கடக்கும்போது 195 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆந்திரத்தில் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 1.50 இலட்சம் பேரும், ஒடிஸாவில் 3.50 இலட்சம் பேருமாக மொத்தம் 5 இலட்சம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Average Rating