சட்ட சிக்கல்கள் உள்ள ஜனாதிபதி தேர்தலை எதிர்க்கின்றோம்!!
அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பெருந்தோட்ட தொழிலாளர்கள் போன்ற பல துறை சார்ந்த தொழிலாளர்களுக்கும் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினரும் தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவருமான கே.டி.லால்காந்த தெரிவித்தார்.
இன்று (12) ஹட்டனில் நடைபெற்ற தொழிலாளர்களின் ஒன்று கூடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது,
நாட்டில் விலைவாசி அதிகரித்துச் செல்கின்றது. இதற்கமைய தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை. அரச ஊழியர்களுக்கு வாழ்க்கை செலவு அதிகரிப்புக்கு ஏற்ப அரசாங்கம் ரூபா 10000த்தை ஒரு அரச ஊழியர்க்கு வழங்க வேண்டும்.
அதனை 2015ம் வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டு சம்பளத்துடன் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாட்டில் உள்ள தொழிலாளர்களை இணைத்து கொண்டு இந்த அரசுக்கு எதிராக நாம் போராட தயார்.
மேலும் மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் வழங்க வேண்டும். அத்தோடு அவர்களுக்கு வீடு, காணி உரிமைக்கான உறுதிப்பத்திரம் வழங்க வேண்டும். அதற்கு அரசு தனியான சட்ட மூலத்தை தயாரிக்க வேண்டும்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள நாம் தயார் ஆனாலும் இப்போது வரும் தேர்தலானது சட்ட விரோதமானது. அதாவது ஜனாதிபதி தேவைக்கான காலம் இன்னும் இருக்கின்ற போதிலும் தனி ஒரு மனிதன் தேவைக்கான கொண்டு வரப்படுகின்ற தேர்தலாகும்.
இதில் உள்ள சட்ட சிக்கல்களை நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்துகின்றோம். எம்மோடு முன்னால் நீதி அரசர் சரத் த சில்வா உட்பட பலர் இக்கருத்தை தெரிவிக்கின்றனர்.
மேலும் இப்போது அரசாங்கத்தினால் கூறப்படுகின்ற ஒரு கருத்தானது தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு எதிர்கட்சிகள் பயம் என்று கூறுகின்றார்கள்.
இவர்களுக்கு நாம் ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகின்றோம். அதாவது முதலாவது நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதியான ஜே.ஆர். ஜெயவர்தனவுக்கு பாராளுமன்றத்தில் மூழு அதிகாரம் காணப்பட்டது.
அவருக்கு நாட்டு மக்களோ, எதிர்கட்சிகளோ பயந்ததில்லை. இப்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மையானது மக்கள் ஆணையால் கிடைத்ததல்ல. அதை ஜனாதிபதி உருவாக்கி கொண்ட ஒரு பலம். இதனை இல்லாது செய்ய நாட்டு மக்களால் முடியும், சட்ட சிக்கல்கள் உள்ள ஜனாதிபதி தேர்தலை நாம் எதிர்க்கின்றோம் என்றும் கூறினார்.
Average Rating