வாலிபர் வெட்டி படுகொலை: மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்ததால் ரவுடி வெறிச்செயல்!!
வியாசர்பாடி ஜாபர்நகர் 9–வது தெருவை சேர்ந்தவர் மவுலானா. இவரது மகன் முகமது ஷெரீப் (23). இவர் தண்டையார்பேட்டையில் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யும் ஏஜென்சியில் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று இரவு 8 மணி அளவில் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய முகமது ஷெரீப் சாப்பிட்டு விட்டு வெளியில் சென்றார். அதன் பின்னர் வீடு திரும்ப வில்லை.
இரவு 12 மணி அளவில் 8–வது தெருவில் முகமது ஷெரீப் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு அங்கு ஓடினர். முகமது ஷெரீப்பின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.
எம்.கே.பி. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு ஸ்டேன்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கள்ளக்காதல் விவகாரத்தில் அதே பகுதியை சேர்ந்த ரவுடி வெங்கடேசன் முகமது ஷெரீப்பை கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
இதுபற்றிய பரபரப்பான தகவல்கள் வருமாறு:–
கொலையுண்ட முகமது ஷெரீப்புக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கும் வெங்கடேசனின் மனைவிக்கும் இடையே கள்ளக் காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக வெங்கடேசனுக்கும், முகமது ஷெரீப்புக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த விவகாரம் தொடர்பாக முகமது ஷெரீப் கடத்தப்பட்டுள்ளார். அப்போது கடத்தல் கும்பல் முகமது ஷெரீப்பை சரமாரியாக அடித்து உதைத்து அனுப்பி வைத்துள்ளது. அந்த கும்பலுக்கு பயந்து முகமது ஷெரீப் போலீசில் புகார் எதுவும் அளிக்கவில்லை. இந்நிலையில்தான் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
6 பேர் கொண்ட கும்பல் முகமது ஷெரீப்பை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளது. அவரை கடத்திய கும்பலே தற்போது கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
இது தொடர்பாக வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தப்பி ஓடிய அவர்களை பிடிக்க உதவி கமிஷனர் பரந்தாமன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இக்கொலை சம்பவம் குறித்து முகமது ஷெரீப்பின் உறவுக்கார பெண் ஒருவர் கூறியதாவது:–
நேற்று இரவு 8 மணி அளவில் அந்த பகுதியில் மர்மமான முறையில் சிலர் சுற்றி திரிந்தனர். யாரையோ குறிவைத்து அவர்கள் காத்திருப்பது போல தெரிந்தது. அவர்கள் எங்கள் வீட்டு பையனைத்தான் கொலை செய்ய வந்திருக்கிறார்கள் என்பது இப்போதுதான் தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating