மலேரியாவைக் கட்டுப்படுத்தியமை பற்றி அறிய இலங்கை வந்த பிரதிநிதிகள்!!
இலங்கையில் மலேரியா நோயைக் கட்டுப்படுத்திய விதம் தொடர்பில் அறிந்துகொள்ளும் நோக்கில் சில நாடுகளின் பிரதிநிதிகள் இன்று (13) இலங்கை வரவுள்ளனர்.
இலங்கையில் மலேரியா தடுப்புக்கு பயன்படுத்தப்பட்ட முறை தொடர்பிலான விடயங்களை சக நாடுகளுடன் பகிர்ந்துகொள்வதே இவர்களின் நோக்கமாகும்.
இதேவேளை இவர்களில் மலேரியா விசேட நிபுணரான ரொபட் பிரிசமும் வருகைதந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாளை (14) நீர்கொழும்பில் நடைபெறவுள்ள சந்திப்பில் இப்பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
1937 ஆம் ஆண்டில் மலேரிய தொற்றுநோய் காரணமாக இலங்கையில் 80,000 பேர் உயிரிழந்தனர். சுமார் 15 இலட்சம் பேர் மலேரிய தொற்றுக்குள்ளாகினர்.
அதன்பின்னர் அவ்வப்போது மலேரியா ஏற்பட்டதுடன் மரணங்களும் சம்பவித்தன.
இறுதியாக 2000மாம் ஆண்டிலேயே மலேரியாவினால் அதிக மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதனையடுத்து 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில் இதுவரை மலேரியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட ஒருவர் கூட அடையாளம் காணப்படவில்லை. தெற்காசிய வலய நாடுகளில் மலேரியாவை முழுமையாக கட்டுப்படுத்திய நாடு என்ற பெருமையை இலங்கை பெற்றுள்ளது.
எனினும் 2014ம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகைத்தந்த வெளிநாட்டவர்களில் 39 பேருக்கு அந் நோயின் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
அவர்கள் அடையாளங்காணப்பட்டு விமான நிலைய சுகாதாரப் பிரிவினால் தேவையான சிகிச்சை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating